கூட்டணியிலிருந்து பாஜகவை கழற்றத் திட்டம்..? அதிமுக தனித்து நிற்கத் தயார் என செல்லூர் ராஜூ சவால்..!
மதுரை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்து போட்டியிடத் தயாரா என கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுக தனித்து போட்டியிடத் தயார் எனக் கூறியிருக்கிறார்.
அதிமுக கூட்டணியிலிருந்து பாஜகவை கழற்றிவிடும் வகையில் இவர் கூறியிருக்கும் கருத்து, அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அதிமுக பொன்விழா கொண்டாட்டம் குறித்து மதுரை மாவட்டம் பரவையில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில்பேசிய அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

செல்லூர் ராஜூ
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை பொறுத்தவரை மனதில் தோன்றும் கருத்துக்களை ஒளிவு மறைவின்றி பேசக்கூடியவர். இதனாலேயே அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்கிக் கொள்வார். அண்மையில் அதிமுக தலைமை குறித்து இவர் தெரிவித்திருந்த கருத்து பெரும் சர்ச்சையானது. இப்போது அடுத்தபடியாக கூட்டணி குறித்தும் வாய் திறந்திருக்கிறார் செல்லூர் ராஜூ.

பரவை
மதுரை மாவட்டம் பரவையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய செல்லூர் ராஜூ, வெற்றி தோல்வி மாறி மாறி வரக்கூடியது என்பதால் தொண்டர்கள் துவளக் கூடாது எனக் கேட்டுக்கொண்டார். மேலும், விரைவில் நடைபெறவுள்ள நகராட்சி, மாநகராட்சி தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிடத் தயார் என்று கூறினார். இதேபோல் கூட்டணிக் கட்சிகளின் துணையின்றி திமுகவும் தனித்து போட்டியிடத் தயாரா என வினவினார்.

பாஜகவுக்கு ஷாக்
திமுகவை வினவியது ஒரு பக்கம் இருக்கட்டும், அதிமுக தனித்து போட்டியிடத் தயார் என இவர் கூறியிருக்கும் கருத்து பாஜக தரப்புக்கு ஷாக் கொடுத்துள்ளது. ஏற்கனவே அதிமுக கூட்டணியிலிருந்து பாஜகவை கழற்றிவிட அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பலர் தலைமைக்கு கோரிக்கை வைத்து வரும் நிலையில் செல்லூர் ராஜூ பகிரங்கமாகவே அதிமுக தனித்து போட்டியிடத் தயார் என சவால் விடுத்துள்ளார்.

யார் கருத்து?
செல்லூர் ராஜூ கூட்டணி குறித்து தெரிவித்துள்ள கருத்து அவரது தனிப்பட்ட கருத்தா அல்லது தலைமையின் எண்ணத்தை சூசகமாக வெளிப்படுத்தினாரா என்றக் கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே காசு கொடுத்து திமுக வெற்றி பெற்றதாகவும் எல்லா கட்சிகளையும் துணைக்கு வைத்துக்கொண்டு போட்டியிட்டு பெற்ற வெற்றியெல்லாம் வெற்றியே இல்லை எனவும் செல்லூர் ராஜூ விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications