ஆண்டவன் தண்டிப்பான்.. தவெகவில் இணைந்தபின் செங்கோட்டையன் சொன்ன வார்த்தை.. எடப்பாடி கொடுத்த பதில்!
மதுரை: நான் என்ற எண்ணத்தை இருப்பவர்களை ஆண்டவன் தண்டித்துவிடுவார் என்று செங்கோட்டையன் கூறிய கருத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார். செங்கோட்டையன் அதிமுகவில் இல்லை என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, அவரின் பேச்சு குறித்து கருத்து சொல்ல எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவரான செங்கோட்டையன், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். முன்னாள் எம்பி சத்யபாமா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தன்னுடைய ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் இணைந்துள்ளார். பனையூர் தவெக அலுவலகத்தின் வாசல் வரை வந்து புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரை செங்கோட்டையனை வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர்.

இதன்பின் தவெக துண்டு அணிவித்து செங்கோட்டையனை விஜய் வரவேற்றார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து செங்கோட்டையன் பேசுகையில், ஜெயலலிதா மறைவுக்கு பின் 3 கூறுகளாக இருந்த இயக்கத்தை ஒன்றாக்க வேண்டும் என்று கருத்துக்களை வெளிப்படுத்தினேன். ஆனால் கருத்துக்கள் பரிமாறப்பட்டதே தவிர செயல்படுத்த முடியவில்லை.
தமிழ்நாட்டில் தூய்மையான ஆட்சி நடத்த ஒருவர் தேவை என்பது மக்கள் மனதில் தோன்றியுள்ளது. இளவல் விஜய் இதற்காக மாபெரும் இயக்கத்தை கட்டமைத்துள்ளார். தவெகவில் நான் இணைந்ததற்கு காரணங்கள் இருக்கிறது. திமுகவும், அதிமுகவும் வேறு வேறு அல்ல.. ஒன்றாக இணைந்து பயணிக்கிறார்கள். அதேபோல் நான் என்று ஒருவன் நினைத்தால், ஆண்டவன் தண்டித்துவிடுவார்.
இறைவன் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலமாக எடப்பாடி பழனிசாமியின் பெயரை சொல்லாமல் செங்கோட்டையன் மறைமுகமான விமர்சித்திருப்பதாக பார்க்கப்பட்டது. இதுதொடர்பாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், செங்கோட்டையன் அதிமுகவில் இல்லை.. அதனால் அதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
தொடர்ந்து மற்றவர்கள் ஆளக் கூடாதா என்ற செங்கோட்டையனின் பேச்சு தொடர்பான கேள்விக்கு, ஒருவர் கருத்தில் மற்றவர்கள் தலையிட முடியாது. ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் கருத்து சொல்ல உரிமை உள்ளது. செங்கோட்டையனை பற்றி கருத்து சொல்வதற்கும் ஒன்றும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications