பிடிஆர் கார் மீது காலணி வீச்சு.. மதுரையில் திமுக ரயில் மறியல்.. பாஜகவுக்கு எதிராக கோஷம்-பரபரப்பு
மதுரை: தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் திமுகவினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
Recommended Video
ஜம்மு காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் கடந்த 11ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவத்தைச் சேர்ந்த 3 வீரர்கள் வீர மரணமடைந்தனர்.
இதில் மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியை சேர்ந்த லட்சுமணனும் வீரமரணம் அடைந்தார். இவரது உடல் காஷ்மீரில் இருந்து சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது அடக்கம் செய்யப்பட்டது.
பிடிஆர் கார் மீது காலணி வீச்சு.. திமுக ஆர்ப்பாட்டம்.. மதுரையில் அண்ணாமலையின் கொடும்பாவி எரிப்பு
கார் மீது காலணி வீச்சு
முன்னதாக இன்று மதியம் அவரது உடல் மதுரை விமான நிலையத்தில் வைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு சார்பில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்த வேளையில் மரியாதை செலுத்தும் விவகாரத்தில் பாஜகவினருக்கும், பழனிவேல் தியாகராஜனுக்கு இடையே வார்த்தை போர் ஏற்பட்டது. இதையடுத்து பழனிவேல் தியாகராஜன் சென்ற கார் மீது பாஜகவினர் காலணி வீசினர்.
பாஜகவினர் கைது
இதற்கிடையே அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசியதாக மதுரை அவனியாபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர். மேலும் பாஜகவினரின் செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பாஜகவினரை கடுமையாக கண்டித்துள்ளனர்.
ரயில் மறியல்
இதற்கிடையே தான் திமுகவினர் தமிழகத்தில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அதன்படி மதுரை ரயில் நிலையத்துக்குள் நுழைந்து திமுகவினர் திடீர் பேராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் ரயில் மறியல் செய்தனர். அதாவது ரயில் நிலையத்தில் நின்ற திருச்செந்தூர்- பாலக்காடு ரயில் இன்ஜின் மீது ஏறி திமுகவினர் போராட்டம் நடத்தினர்.
கோஷமிட்ட திமுகவினர்
அப்போது காலணி வீசியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பாஜக தலைவர் அண்ணாமலை, மதுரை நிர்வாகிகளுக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிற இடங்களில் போராட்டம்
மேலும் மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே திமுகவினர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். முன்னதாக மதுரை விரகனூர் சுற்றுச்சாலை அருகே திமுக வினர் பாஜக தலைவர் அண்ணாமலையின் கொடும்பாவியை தீயிட்டு எரித்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பஸ் நிலையம் முன்பு திமுகவினர் சாலை மறியல் செய்தனர். அதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரிலும் திமுகவினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதேபோல் தமிழகத்தில் மேலும் சில இடங்களில் ஆர்ப்பாட்டம் மறியல் நடைபெற்றது.