என் தந்தை பெயர் சிதம்பரம் பிள்ளை.. வ.உ.சி சிலைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் வாயைவிட்ட சுந்தர்.சி
மதுரை: தனது தந்தையின் பெயர் சிதம்பரம் பிள்ளை என்று இயக்குநர் சுந்தர்.சி பேசி இருப்பது விவாதமாகி இருக்கிறது. வ.உ.சிதம்பரனாருக்கு 140 அடி சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா மதுரையில் பிரம்மாண்டமாக நடந்த நிலையில், சுந்தர்.சி-யின் பேச்சு புதிய சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.
புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்தின் ஏசிஎஸ் அறக்கட்டளை சார்பாக மதுரை சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாருக்கு 140 அடி சிலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா மதுரை அம்மா திடலில் நடைபெற்றது. வ.உ.சிதம்பரனார் சிலைக்கு குடியரசு துணைத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்.

இதில் மத்திய இணையமைச்சர் எ.முருகன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நடிகர் விஜயகுமார் மற்றும் இயக்குநர் சுந்தர்.சி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் இயக்குநர் சுந்தர்.சி பேசுகையில், என் பெயர் சுந்தர்.சி.. இதில் சி என்பது என் தந்தையின் பெயர்.. சிதம்பரம் பிள்ளை.. அவருக்கு என் தாத்தா அந்த பெயரை சூட்டியதற்கு காரணம் வ.உ.சிதம்பரனார் தான்.
என் தாத்தா நினைத்திருக்க கூட மாட்டார்.. ஏ.சி.சண்முகம் வ.உ.சி.க்கு 150 அடியில் சிலை அமைக்கப் போகிறார். அதன் அடிக்கல் நாட்டு விழாவில் நான் பங்கேற்று பேசும் பாக்கியம் கிடைக்கும் என்றெல்லாம் நினைத்திருக்க மாட்டார்கள். இந்த சபையில் நிற்க காரணமாக அமைந்த ஏ.சி.எஸ் சாருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். கப்பல் என்றால் வ.உ.சி. நினைவுவரும்.
அதுபோல் நட்பு என்றால் ஏ.சி.எஸ் தான்.. ஏனென்றால் நண்பர்களுக்கு கைகொடுத்து தூக்கிவிட தயங்கியதே இல்லை.. நண்பர்கள், தெரிந்தவர்கள் என்று அல்ல.. தெரியாதவர்கள் கூட அவர் வாசலில் நின்றால், அவரிடம் இல்லை என்ற வார்த்தையே சொல்ல மாட்டார். அப்படியொரு வள்ளல். அவர் வ.உ.சி சிலையை திறக்கிறார் என்றால், அதற்கு பின் ஒரு நல்ல நோக்கம் உள்ளது.
சுதந்திரத்தின் அருமை இளம் தலைமுறைக்கு தெரியவில்லை என்ற சந்தேகம் எனக்கு இருந்து கொண்டே இருக்கிறது. இளைஞர்கள் வரலாறு படைக்க வேண்டும் என்றால், வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். ஏ.சி.எஸ் இந்த சிலையை அமைப்பது வ.உ.சி.யின் பெருமையை சொல்வதற்கு தான். சிதம்பரனார் ஒரு செல்வந்தர்.. வழக்கறிஞர்.. சகலகலா வல்லவர்..
அவர் படிப்பதற்காக அவரின் தந்தை அந்த ஊரில் ஒரு பள்ளிக்கூடத்தையே கட்டியவர்.. ஆனாலும் சுதந்திரத்தின் போது சம்பாதித்த ஒவ்வொரு பைசாவையும் செலவு செய்து சுதேசி கப்பல் நிறுவனத்தை தொடங்கினார்.. நாளை வ.உ.சி. சிலையை பார்க்கும் போது அவரின் நினைவு இளைஞர்கள் மனதில் நிற்கும்.. இந்த மாபெரும் பணியை செய்யும் ஏ.சி.எஸ் சாருக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications