செல்பி எடுங்க.. மறக்காம ஓட்டும் போட்ருங்க.. மதுரையைக் கலக்கும் சிபிஎம் வெங்கடேசன்!
மதுரை: மதுரை லோக்சபா தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எஸ். வெங்கடேசன் மிகத் தீவிரமான வாக்கு வேட்டையில் ஈடுபட்டுள்ளார்.
மதுரையில் பாராளுமன்ற தேர்தல் அறிவித்த பின்னர் மதுரை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வாக்கினை சேகரிப்பதில் மும்மரம் காட்டி வருகின்றனர். மதுரையில் அதிமுக வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக மதுரை புறநகர் மாவட்ட செயலாளருமான ராஜன்செல்லப்பாவின் மகன் ராஜ்சத்யன் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார்.
மறுபக்கம் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எழுத்தாளர் சு.வெங்கடேஷ் போட்டியிடுகிறார். மதுரையை பொறுத்தவரை அதிமுக - மார்க்சிஸ்ட் இடையே போட்டி மிக கடுமையாக உள்ளது.
கார்த்தி தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பார்.. ஆனா நம்ம எச் ராஜா அப்படியில்லை.. அமைச்சர் விஜயபாஸ்கர்
செல்லூர் ராஜு
அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யனுக்கு ஆதரவாக அமைச்சர் செல்லூர் ராஜு தீவிரமாக வேலை செய்து வருகிறார். தினமும் அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யனை முக்கியஸ்தர்களிடமும், பல்வேறு சங்கத்தினரிடமும் அழைத்து அறிமுகப்படுத்தி வாக்கு சேகரித்து வருகிறார்.
வாக்கு வேட்டை
அதேபோல் மதுரை திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் அவரது ஆதரவாளர்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். அதன் ஒருபகுதியாக பொது மக்களோடு செல்பி எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் வெங்கடேசன்.
செல்பி எடுங்க
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் ஜல்லிக்கட்டு காளை சிலை அருகில் சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் உடன் செல்பி எடுத்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான இளைஞர்கள், பொது மக்கள் வெங்கடேசன் புகைப்படம் பதித்துள்ள மாஸ்க் அணிந்து ஆர்வமாக செல்பி எடுத்து கொண்டனர்.
கேட்பாரற்றுக் கிடக்கும் மதுரை
இந்நிகழ்வின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் கூறுகையில், கட்சி வேறுபாடுகளை மறந்து அனைவரும் இணைந்து மதுரையை நேசிக்கும் விதமாக இந்நிகழ்ச்சி இளைஞர்களாலும் மாணவர்களாலும் தொடர்ந்து நடத்தப்பட இருக்கிறது. பாரம்பரியமிக்க வரலாற்று ஒளி வீசிய மதுரை இன்று கேட்பாரற்று கிடக்கிறது.
மதுரையை மீட்போம்
கல்வி, தொழில் மற்றும் வேலை வாய்ப்பில் அரசியல் அநாதையாகி விட்ட மதுரையை மீட்டெடுக்க மதுரையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் யுக்திகளோடு எங்களது பிரச்சாரம் வைகையை வணங்கி ஆரம்பமாகிறது. எங்களது கூட்டணிக் கட்சியினர் அனைவரையும் ஒருங்கிணைத்து இந்தியாவின் மிக முக்கியமான இந்த தேர்தலை சந்தித்து இளைஞர்கள் மற்றும் எனது எழுத்தின் மேல் பற்று கொண்ட வாசகர்கள் துணையோடு இந்த தேர்தலில் வெற்றிப் பெறுவேன். வேட்பாளர் மட்டும் அன்றி எழுத்தாளர் என்பதனால் செல்லும் இடங்களில் எல்லாம் கூடுதல் வரவேற்பு எனக்கு கிடைத்து வருகிறது என்று தெரிவித்தார்.