திருப்பரங்குன்றத்தில் 18ஆம் தேதி ஆடு, கோழி பலி? பாஜக பரப்பியது பொய் போஸ்டர்! தமிழக அரசு விளக்கம்!
மதுரை: திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் போஸ்டர் ஒன்று பரவி வருகிறது. அதில் ஆடு கோழி பலியிட்டு கந்தூரி வழங்கப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில், பாஜக பரப்பும் போஸ்டர் பொய்யானது என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் அந்த அறிவிப்புக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் விளக்கம் அளித்துள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக மதுரை திருப்பரங்குன்றம் உள்ளது. அங்கு தமிழகம் முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் தரிசனம் செய்கின்றனர்.

இந்த நிலையில் மலையில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் ஆடு, கோழிகளை பலியிட வேண்டும் என இஸ்லாமிய மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அங்கு ஆடு, கோழிகளை பலியிட தடை விதிக்கப்பட்டது.
இதன் காரணமாக இரு தரப்பினரிடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் சென்ற வக்பு வாரிய தலைவரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவரும் ராமநாதபுரம் எம்பியுமான நவாஸ் கனி குறிப்பிட்ட சில அமைப்புகளுடன் அங்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது அவருடன் வந்தவர்கள் பிரியாணி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படத்தை நவாஸ் கனியும் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மலையைக் காக்க போராட்டம் நடைபெறும் என இந்து முன்னணி அறிவித்திருந்தது. அதில் பல இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், அரசியல் கட்சியினரும், சினிமா பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து இந்த விவகாரம் அமைதியாக இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் போஸ்டர் ஒன்று பரவி வருகிறது.
அதில," மதுரை திருப்பரங்குன்றம் சிக்கந்தர் மலை ஹஜரத் சிக்கந்தர் பாதுஷா பள்ளிவாசல் மத வழிபாட்டு உரிமையை காக்க சிக்கந்தர் மலையில் ஆடு கோழி அறுத்து சமூக நல்லிணக்கத்திற்கான சமபந்தி விருந்து பிப்ரவரி 18ஆம் தேதி நடைபெறும். இதில் அனைத்து மத மக்களும் கலந்து கொள்ள வேண்டும் - ஹஜ்ரத் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா தர்கா பள்ளிவாசல், மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் மற்றும் அரசியல் கட்சி இயக்கங்கள்" என ஒரு போஸ்டர் பகிரப்பட்டது.
இந்த போஸ்டரை பகிர்ந்திருந்த தமிழக பாஜக," இந்துக்களை சீண்டி தொடர்ச்சியாக மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் அமைப்புகளை கண்டு கொள்ளாமல் தூங்கும் இந்த அரசு எப்போது விழித்துக் கொள்ளு? என பேஸ்புக்கில் பதிவிட்டு இருந்தது. இந்த நிலையில் இது போலியானது என தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் கூறியுள்ளது.

அதில்," திருப்பரங்குன்றம் மலையில் மீண்டும் ஆடு கோழி பலி கொடுக்கப் போவதாக இஸ்லாமிய அமைப்புகள் போஸ்டர் ஒட்டி உள்ளதாக தமிழ்நாடு பாஜக பதிவிட்டுள்ளது. இது போலியான எடிட் செய்யப்பட்ட போஸ்டர் எனவும் பழைய படத்தில் இருந்த மாதத்தையும் தேதியையும் மட்டும் மாற்றி மீண்டும் பலி கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளதாக வதந்தி பரப்பி வருகின்றனர். அப்படத்தில் இடம்பெற்றுள்ள மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் அமைப்பினரும் இதனை மறுத்துள்ளனர்" என கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே," மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் பெயரை பயன்படுத்தி திருப்பரங்குன்றத்தில் பிப்ரவரி 18 சமபந்தி கந்தூரி என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்திக்கும் மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இச்செயல் மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் நற்பெயருக்கு கலிங்கம் விளைவிக்கும் செயலாகும். மேலும் அவதூறு செய்தியை சமூக வலைதளங்களில் பரப்புவோர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்" என அதன் தலைவர் அப்துல் காதர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications