முறிந்த கை, கால்கள்.. படுத்த படுக்கையில் அரசு பள்ளி மாணவி.. 543 மதிப்பெண் பெற்ற உமா மகேஸ்வரி!
மதுரை: பிளஸ் 2 தேர்வு எழுதுவதற்கு 4 மாதங்களுக்கு முன்பு மாடியில் தடுமாறி விழுந்து கை, கால்களில் முறிவு ஏற்பட்ட அரசு பள்ளி மாணவி விடாமுயற்சியால் படித்து தேர்வு எழுதி 543 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.
தமிழகத்தில் 10, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்ற நடைமுறை நெடுங்காலமாக இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியின் போது பள்ளிக் கல்வித் துறை செயலாளராக இருந்த உதயசந்திரன் ஐஏஎஸ், புதிய மாற்றத்தை கொண்டு வந்தார்.
அதில் இனி தமிழகத்தில் 10, 12 பொதுத் தேர்வில் ரேங்கிங் சிஸ்டத்தை நீக்கினார். அத்துடன் 12 ஆம் வகுப்பில் 1200 மார்க்களுக்கு தேர்வு எழுதி வந்த நிலையில் அதை 600 ஆக குறைத்தார். மேலும் 11 ஆம் வகுப்பு தேர்வையும் பொதுத் தேர்வாக்கினார். இதன் மூலம் கடந்த சில ஆண்டுகளாக 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான பொதுத் தேர்வு மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடந்தது. தமிழகத்தில் 8 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதினர், அது போல் புதுவையில் 14,728 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இந்த தேர்வுக்கான விடை திருத்தும் பணி ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 21 ஆம் தேதி முடிந்தது.
விடைத் தாள் திருத்தும் பணிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் 79 முகாம்களில் ஈடுபட்டிருந்தனர். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 5ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மே 7 ஆம் தேதி நீட் தேர்வு இருப்பதால் மாணவர்கள் மனரீதியாக பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டன.
தேர்வு முடிவுகள் நேற்றைய தினம் வெளியானது. இதில் வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகளவில் தேர்ச்சி பெற்ற மாநிலங்களில் விருதுநகர் முதலிடத்தில் உள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு மட்டும் கொரோனா தொற்றால் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் கூடுதலாகியுள்ளது.
பிளஸ் 2 தேர்வில் திண்டுக்கல் மாணவி நந்தினி 600-க்கு 600 மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளார். அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் 95 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கை, கால்கள் முறிந்த நிலையிலும் மதுரை மாணவி ஒருவர் 543 மதிப்பெண்களை எடுத்ததை அடுத்து அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

மதுரை திருமங்கலம் பகுதியை சேர்ந்த உமா மகேஸ்வரி. இவர் அதே பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். தாய், தந்தை இருவரும் கூலித் தொழிலாளிகள். எனினும் உமா படிப்பில் சுட்டி. இவருடைய தங்கை 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டு மாடிபடியிலிருந்து உமா தவறி விழுந்தார். அதில் அவருடைய இரு கால்களும் உடைந்தன. அது போல் அவருடைய இடது கையும் முறிந்தது.
இத்தனை கடினமான சூழலில் பிளஸ் 2 தேர்வை எழுத முடியாதோ என நினைத்தார். ஆனால் தன்னுடைய விடாமுயற்சியால் நன்றாக படித்து பிளஸ் 2 தேர்வெழுதினார். ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கம், பெற்றோரின் உழைப்பு, சக மாணவிகள் இவரை தூக்கி சென்று பரீட்சை ஹாலில் விட்டது இவை எல்லாவற்றுக்கும் உமாவுக்கு பலன் கிடைத்துள்ளது. தற்போது உமா 543 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications