முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் மதுரை வருகை- கீழடி அகழாய்வு பணிகளை ஆய்வு!
மதுரை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் மதுரைக்கு வந்தார். மதுரையில் இருந்து சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வு நடைபெறும் பணிகளை அவர் பார்வையிட்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின். இதனைத் தொடர்ந்து நாளை பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்க தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் கடந்த மே மாதம் இறுதியில் கொரோனா தடுப்பு பணிகளைப் பார்வையிடுவதற்காக மதுரைக்கு வருகை தந்தார். அதன்பின்னர் இந்த மாதத்தின் துவக்கத்தில் பாப்பாபட்டி கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் மதுரைக்கு வருகை தந்தார்.

மதுரை- கீழடி
சென்னையில் இருந்து புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின் இன்று பகல் 12.30மணிக்கு மதுரை வருகை புரிந்தார். அங்கிருந்து சிவகங்கை மாவட்டம் கீழடியில் தொல்லியல் அகழாய்வு நடைபெறும் பணிகளை அவர் ஆய்வு செய்தார். கீழடியில் தமிழக அரசு சார்பில் தற்போது 7-வது கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆதி தமிழரின் வைகை நதிக் கரை நாகரிகத்தை பறைசாற்றும் சான்றுகள் குவியல் குவியலாக கீழடியில் கிடைத்து வருகின்றன. இந்த பொருட்களை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். மேலும் அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய ஆய்வுகள் குறித்தும் அதிகாரிகளுடன் கீழடியில் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

மேம்பால பணிகள் ஆய்வு
கீழடி பயணத்துக்கு பின்னர் மதுரை- நத்தம் சாலையில் ரூ100 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் பிரம்மாண்டமான கலைஞர் நூலகம் கட்டுமானப் பணிகளை பார்வையிட உள்ளார். மதுரையில் வைகை நதியின் குறுக்கே ஓபுளா படித்துறை, குருவிக்காரன் சாலையில் நடைபெற்று வரும் மேம்பால பணிகள், பாண்டிகோவில் அருகே உயர்மட்ட மேம்பால பணிகள் ஆகியவற்றையும் அவர் ஆய்வு செய்ய உள்ளார்.

பசும்பொன் தேவர் குருபூஜை
இன்று இரவு மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் தங்கும் முதல்வர் ஸ்டாலின் நாளை காலை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அங்கிருந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் காலை 9 மணிக்கு தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

ஆடம்பரம் தவிர்ப்பு அறிவுறுத்தல்
முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அண்மைக்காலமாக முதல்வர் ஸ்டாலினின் பயணத்தில் ஆடம்பரங்கள் தவிர்க்கப்பட்டு வருகின்றன. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட நிகழ்ச்சிகளிலும் இதனை திமுகவினர் பின்பற்ற வேண்டும் எனவும் கட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ளதாம்.












Click it and Unblock the Notifications