‘கலைஞருக்கு‘ 6அடி இடம் கூட கொடுக்காதவர்கள்.. தமிழக அரசு மீது ஸ்டாலின் சரமாரி குற்றச்சாட்டு!
Recommended Video
மதுரை: மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு 6 அடி இடம் கூட கொடுக்க மறுத்த அரசு என தமிழக அரசை ஸ்டாலின் சரமாரியாக சாடியுள்ளார்.
திமுகவின் தலைவர் முக ஸ்டாலின் திருப்பரங்குன்றத்தில் அக்கட்சி வேட்பாளரை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டார். தொடர்ந்து பொதுமக்களிடம் அவர் பேசியதாவது, வருகிற 19ம் தேதி திருப்பரங்குன்றத்தின் சட்டமன்ற இடைத் தேர்தல் வரப்போகிறது. அப்போது நமது வேட்பாளர் சரவணனை உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
ஏற்கனவே ஒரு தேர்தல் முடிந்து விட்டது. அது நாடாளுமன்ற தேர்தல். அதில் நீங்கள் வாக்களித்து உள்ளீர்கள். திமுகவை ஆதரித்து உள்ளீர்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். நமது கூட்டணிக்குத்தான் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்து உள்ளீர்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

15 காசு கூட இல்லை
மோடி பிரதமராக இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் நீங்கள் வாக்களித்துள்ளீர்கள் என்பது எனக்கு தெரியும். வங்கியில் ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் ரூபாய் செலுத்துவேன் என்று சொன்னார், அதை செய்தாரா செய்யவே இல்லை. 15 லட்சம் வேண்டாம் 15,000 மாவது போட்டிருக்கலாம் அல்லவா 15 காசு கூட யாருக்கும் அவர் போட வில்லை என்பதே உண்மை.

மோடிக்கு கவலையில்லை
உறுதிமொழியை காப்பாற்றுவது மட்டுமல்ல மக்களைப் பற்றியும் மோடிக்கு கவலையில்லை. புயலினால் பாதிக்கப்பட்ட நமது தமிழக மக்கள் இன்னும் சகஜமான நிலைக்கு வர வில்லை. அப்போது மோடி அவர்கள் வந்து தமிழகத்திற்கு ஒரு ஆதரவு தெரிவிக்கவில்லை. ஆனால் இப்பொழுது தமிழகத்திற்கு வருகிறார் என்று சொன்னால் ஓட்டுகளை பெறுவதற்கு மட்டுமே.

துப்பாக்கிச்சூடு
இன்றுள்ள முதலமைச்சர் பிரதமர் மோடியை தூத்துக்குடி போராட்டத்தின் போது அழைத்து பேசி இருக்க வேண்டும். ஆனால் பேசவில்லை. போராட்டக்காரர்கள் உச்சத்திற்கு சென்று 100 நாட்கள் கழித்து ஒரு பேரணி நடத்தி உள்ளார்கள். அப்போது காக்கை குருவிகளைப் சுட்டுத் தள்ளுவது போல் அந்த மக்களை சுட்டுத் தள்ளி உள்ளது இந்த அரசு.

எடப்பாடியும் வேண்டாம்
இதற்காவது ஒரு ஆறுதல் செய்தியோ அல்லது வருத்தமோ முதலமைச்சரோ அல்லது பிரதமரோ தெரிவிக்கவில்லை. எடப்பாடிக்கு ஒரே குறிக்கோள் தனது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதே. எப்படி பிரதமரை வேண்டாம் என்று முடிவு செய்து வாக்களித்து உள்ளீர்களோ அதேபோல எடப்பாடியும் வேண்டாம் என்று செய்வதற்கு இந்த இடைத்தேர்தலில் வாக்களியுங்கள்.

திமுக ஆட்சி அமைக்கும்
திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் போதுமான இடம் இருக்க வேண்டும். இனிமேல் இது அதிமுகவிற்கு கிடைக்கப்போவதில்லை. வருகிற 23-ஆம் தேதி திமுக ஆட்சி அமைக்கும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். மூன்று எம்எல்ஏக்களை சஸ்பெண்ட் செய்வதற்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ராகுல்தான் பிரதமர்
இது சதி சூழ்ச்சி என்பதை நான் புரிந்து கொண்டேன். அடுத்த அரைமணி நேரத்தில் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லை எனக் கூறி ஒரு தீர்மானம் வைத்தோம். 23ம் தேதி ஓட்டு எண்ணி முடிக்கிறபோது மோடி பிரதமராக இருக்கப்போவதில்லை. ராகுல் காந்திதான் பிரதமராக ஆளப்போகிறார்.

குறைக்க போகிறோம்
கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவித்தொகை ஏழை எளிய பெண்களுக்கு திருமண உதவித்தொகை திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களை கலைஞர் செய்து கொடுத்தார்கள். அவருடைய வழியிலேயே நாங்களும் நல்லதொரு திட்டங்களை செய்து கொடுப்போம்.
பெட்ரோல் டீசல் கேஸ் இவைகளையெல்லாம் குறைக்க போகிறோம்.

6 அடி நிலம்
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 5 சவரன் தங்க நகை கடன்களை உடனடியாக தள்ளுபடி செய்வேன் என தெரிவித்துக் கொள்கிறேன்.
கலைஞர் நம்மை விட்டு மறைந்த பொழுது ஒரு ஆறடி நிலம் கூட தர மறுத்தது தான் இந்த தமிழக அரசு. எத்தனையோ தலைவர்களையும் அரசியல்வாதிகளையும் உருவாக்கிய கலைஞருக்கு 6 அடி இடம் தர மறுத்தார்கள். பல தலைவர்களுக்கு நினைவிடம் அமைத்து தந்தவர் கலைஞர் தான்.

நீதிமன்றம் சென்று
தமிழ்மொழிக்கு செம்மொழி என உயரிய அந்தஸ்தை பெற்று தந்தார் கலைஞர். அப்படிப்பட்ட தலைவர் கலைஞருக்கு 6 அடி இடம் கூட தர மறுத்தவர்கள் தான் இவர்கள். பின்பு நீதிமன்றம் வரை சென்று கலைஞருக்கு அந்த ஆறடியை நாம் பெற முடிந்தது. இவ்வாறு ஸ்டாலின் பிரச்சாரத்தில் பேசினார்.












Click it and Unblock the Notifications