"மதம் முக்கியம்னா வாக்களிக்க போகாதீங்க" மேலூரில் ஹிஜாப் பெண்ணுக்கு எதிர்ப்பு.. பாஜக நாராயணன் காட்டம்
மதுரை: மேலூரில் ஹிஜாப் அணிந்த வாக்காளருக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக முகவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பாஜக முகவர் கிரிராஜன் இப்படி வெளியேற்றப்பட்டதற்கு பாஜக செய்தி தொடர்பாளர் நாராயண் திரிப்பாதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் மதுரை மேலூர் நகராட்சி 8வது வார்டில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாப்பை அகற்றும்படி பாஜக முகவர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அங்கு பாஜக முகவராக இருந்த கிரிராஜன், ஹிஜாப் அணிந்து வந்தால் எப்படி முகம் தெரியும். வாக்களிப்பவரின் முகத்தை பார்த்தால் தானே வாக்களிக்க அனுமதிக்க முடியும் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தார்.

எதிர்ப்பு
ஆனால் அங்கு இருந்த தேர்தல் அதிகாரி பாஜக பிரமுகரின் கருத்தை ஏற்கவில்லை. ஹிஜாப் அணிந்து வந்து வாக்களிப்பதில் தவறு இல்லை. அவரின் முகம் தெரிகிறது. அதனால் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறினார். ஆனால் பாஜக பிரமுகர் கிரிராஜன் தொடர்ந்து அங்கு பிரச்சனை செய்து வந்தார். மேலும் ஹிஜாப் அணிந்த வாக்காளரை வெளியேற்றும்படி கூறினார். தொடர்ந்து பாஜக பிரமுகர் கிரிராஜன் அங்கு கோஷம் எழுப்பி வந்த நிலையில் அவர் தேர்தல் அதிகாரிகள் மூலம் வாக்கு சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பாஜக ஹிஜாப்
புதிதாக வேறு ஒரு பாஜக பிரமுகர் அங்கு கொண்டு வரப்பட்டார். இதைப்பற்றி மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் அளித்துள்ள விளக்கத்தில், ஹிஜாப் அணிந்த வாக்காளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக முகவரிடம் விசாரணை நடத்தப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். யாரும் எந்த உடையணிந்து வேண்டுமானாலும் வாக்களிக்கலாம் என்று உரிமையை அரசமைப்புச் சட்டம் வழங்குகிறது. இந்தியா மதச்சார்பற்ற நாடு.

ஹிஜாப் அணியலாம்
அனைத்து வாக்காளர்களும் அவர்களது மத நம்பிக்கையை பின்பற்ற முழுமையான உரிமை உள்ளது. இதை யாரும் தடுக்க முடியாது என்று குறிப்பிட்டார். இந்த நிலையில் பாஜக செய்தி தொடர்பாளர் நாராயண் திரிப்பாதி பாஜக முகவர் கிரிராஜன் வெளியேற்றப்பட்டதை கண்டித்து உள்ளார். அவர் தெரிவித்துள்ள கருத்தில், இன்று மதுரை மேலூர் 8வது வார்டு அல்அமீன் பள்ளி வாக்குச்சாவடியில் ஹிஜாப் அணிந்து சென்ற இஸ்லாமிய பெண்மணியின் அடையாளம் வேண்டி ஆட்சேபணை தெரிவித்த பாஜகவின் வாக்குச்சாவடி முகவர் கிரிராஜனை வெளியேற்றியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

நாராயண் திரிப்பாதி
அது அவரின் சட்ட உரிமை மட்டுமல்ல கடமையும் கூட. "உங்களுக்கு மத நம்பிக்கைகள் தான் முக்கியம் என்று கருதுவீர்களேயானால் வாக்களிக்க செல்லாதீர்கள், ஹிஜாப் அணிந்து வாக்களிக்க சென்றால் வாக்காளரை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்படும்" என்றும், "கடவுச்சீட்டு வேண்டுமென்றால் ஹிஜாபை நீக்கி புகைப்படம் எடுத்து கொள்ளும் இஸ்லாமிய பெண்கள். வாக்காளர் அடையாள புகைப்படம் எடுக்க மறுப்பது தவறு" என்றும் ஜனவரி 23,2010ம் ஆண்டு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்ட உரிமை
சட்டவிரோதமாக பாஜகவின் முகவரை வெளியேற்றிய அதிகாரிகளை தேர்தல் ஆணையம் தண்டிக்க வேண்டும்.பாஜக முகவரை வாக்குசாவடிக்குள் அனுமதித்து நேர்மையான தேர்தலை நடத்த வேண்டும், என்று நாராயண் திரிப்பாதி குறிப்பிட்டு இருக்கிறார். இன்னொரு பக்கம் மேலூர் பாஜக முகவர் கிரிராஜனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹிஜாப் அணிந்த வாக்காளரை பாஜக முகவர் எதிர்த்த நிலையில் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று இவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இவருக்கு எதிராக ஏற்கனவே ஒரு வழக்கு இருப்பதாகவும் மேலூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications