மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் ரத்து.. பக்தர்கள் ஏமாற்றம்
மதுரை: மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்துள்ளது. இதனால் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க கோயில் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு கோயில்கள் மூடப்பட்டுள்ளன.

கடந்த 14 ஆம் தேதி சித்திரை மாதம் பிறந்தது. இதனால் மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஏனெனில் அங்கு வைகை ஆற்றில் நடைபெறும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் உலக பிரசித்தி பெற்றது.
இந்த நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான மக்கள் மதுரைக்கு வருவது வழக்கம். இது சித்திரை திருவிழாவாக ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த விழா கொடியேற்றம், பட்டாபிஷேகம், திக்விஜயம், மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம், எதிர்சேவை, அழகர் வைகையில் எழுந்தருளல் ஆகிய நிகழ்ச்சிகளாக நடைபெறும்.
முதல் 15 நாட்கள் தேரோட்டம், மீனாட்சி திருக்கல்யாணம் ஆகியவை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறும். அடுத்த 15 நாட்களில் அழகர் கோயிலிருந்து கள்ளழகர் மதுரைக்கு எழுந்தருளுவார். பின்னர் எதிர் சேவை, பூப்பல்லக்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். இதில் முக்கியமானது மண்டூக ரிஷிக்கு மோட்சம் அளிப்பது மற்றும் புராணம் வாசித்தல் ஆகும்.
இந்த நிலையில் கொரோனா பாதிப்பால் கூட்டம் கூடுவதை தவிர்க்க கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதே சமயம் இந்த ஆண்டு அழகர் ஆற்றில் இறங்குவதை தவிர்த்து விடுவதால் ஆகமவிதிகளின்படி இடையூறுகள் ஏற்படுவதை தடுக்க கோயில் புரோகிதர்கள் முக்கிய நிகழ்ச்சியான மண்டூக ரிஷிக்கு மோட்சம் அளிப்பது மற்றும் புராணம் வாசித்தல் நிகழ்ச்சிகளை மட்டும் நடத்தலாம் என அறிவுறுத்தியதால் இவை மட்டும் நடைபெறுகிறது.
எனவே மேற்கண்ட நிகழ்ச்சிகளை வரும் மே 8 ஆம் தேதி மாலை 4.30 மணி முதல் 5 மணி வரை www.tnhrce.gov.in என்ற இணையதளத்தில் மக்கள் கண்டு களிக்கலாம்.












Click it and Unblock the Notifications