மதுரை எய்ம்ஸ்.. மாணவர்கள் அதிருப்தியா.. நாளிதழ் செய்தி தவறானது: நிர்வாகம் விளக்கம்
மதுரை: எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்களை மதுரைக்கு மாறாததால் ராமநாதபுரம் மருத்துவமனை வளாகத்தில் பயிலும் மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக சமீபத்தில் நாளிதழில் வெளியான செய்தி பொய்யானது என மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. எந்த புகாரும் இல்லை என தெரிவித்துள்ளது.
பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியில் "மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள், ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரியில் நடைபெற்று வந்தது. கடந்த ஜனவரி மாதம் மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதிக்கு மருத்துவக்கல்லூரியை மாற்ற திட்டமிட்டு, வாடகை கட்டிடத்திற்கு டெண்டர் கோரப்பட்டது. ஆனால், தற்போது அந்த முயற்சியை எய்ம்ஸ் நிர்வாகம் கைவிட்டிருக்கிறது இதனால் மாணவர்கள் மீண்டும் ராமநாதபுரத்திலேயே கல்வியை தொடர ஏற்பாடு செய்து வருகிறது. மதுரைக்கு மாற்றப்பட உள்ளதாக கிடைத்த தகவலால் உற்சாகமடைந்த மாணவர்கள், தற்போது மீண்டும் ராமநாதபுரத்திலேயே வகுப்புகளை தொடர உத்தரவிட்டுள்ளதால், கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்" என்று செய்தி வெளியாகி இருந்தது.

இந்நிலையில் இந்த செய்தி பொய்யானது என்று மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக மதுரை எய்ம்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "எய்ம்ஸ் மதுரை திட்டத்தின் முன்னேற்றம் குறித்து பல்வேறு சமூக வலைதளங்கள் தவறான தகவல்களை பரப்பி வருவதும், அதை அரசியல் உள்நோக்கத்துடன் தொடர்புபடுத்துவதும் எங்கள் கவனத்திற்கு வந்திருக்கிறது. இந்தத் தவறான தகவல்களும் பொய்ப் பிரச்சாரங்களும் நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதையும், ஆரோக்கியமற்ற மற்றும் தவறாக வழிநடத்தும் தவறான கதைகளைப் பரப்புவதையும் நோக்கமாகக் கொண்டிருப்பதாக தோன்றுகிறது.
மதுரை எய்ம்ஸ் தொடர்பாக வெளியிடப்பட்ட சில செய்திகள் மற்றும் பிறரால் பகிரப்பட்ட செய்திகள் தவறானவை என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம். எய்ம்ஸ் மதுரை திட்டத்தின் முன்னேற்றம் தவறான புகைப்படங்கள் மற்றும் தரவுகளுடன் தவறாக சித்தரிக்கப்பட்டு வருகிறது.
எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மதுரைக்கு மாறாததால் மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக அண்மையில் நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தி பொய்யானது. இந்தக் கூற்று முற்றிலும் ஆதாரமற்றது. உண்மைக்குப் புறம்பானது. ராமநாதபுரத்தில் வழங்கப்படும் வசதிகள் குறித்து மாணவர்கள் முழுமையாக திருப்தி அடைந்து உள்ளார்கள். இத்தகைய கற்பனையான மற்றும் தவறான அறிக்கையை ஏற்க முடியாது.
இத்திட்டம் தொடர்பான தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு அனைவரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். எய்ம்ஸ் மதுரை திட்டம் திட்டமிட்ட காலக்கெடுவின்படி முன்னேற்றத்தில் இருக்கிறது. ஒப்பந்ததாரருடன் ஒப்பந்தம் கையெழுத்தானது முதல் பணிகள் தங்கு தடையின்றி தொடர்கின்றன” என்று மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications