நொறுக்கப்பட்ட பொய்கள்.. ஜெயராஜ், பென்னிக்ஸ் உடலில் நிறைய காயம்! பிரேத பரிசோதனை அறிக்கையால் திருப்பம்
மதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் உடலில் காயங்கள் இருப்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ள தகவலை மதுரை உயர்நீதிமன்ற கிளை வெளியிட்டுள்ளது. வழக்கில் இது முக்கியமான திருப்பமாகும்.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரின் லாக்அப்பில் கடுமையாக தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவர்கள் இருவரும், கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டு அடுத்தடுத்து மரணமடைந்தனர்.
இந்த வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளை, தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. 3 டாக்டர்கள் முன்னிலையில், பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜுக்கு பிரேதப் பரிசோதனை நடைபெற்றது.
இந்த அறிக்கை சீலிட்ட கவரில் ஹைகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது. எனவே அறிக்கையிலுள்ள அம்சங்கள் ஊடகங்கள் உள்ளிட்ட எந்த ஒரு தரப்புக்கும் தெரியாமல் இருந்தது.

வழக்குப்பதிவுக்கு முகாந்திரம் உள்ளது
ஆனால், நீதிபதிகள், பிரகாஷ் மற்றும் புகழேந்தி ஆகியோரின் முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தங்களிடம் தாக்கல் செய்த பிரேத பரிசோதனை அறிக்கையில், தந்தை, மகன் உடலில் அதிக காயங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டிருக்கும் தகவலை தெரிவித்தனர். எனவே சாத்தான்குளம் காவல் துறையினர் மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என்றும் அவர்கள் கூறினர்.

அதிக காயங்கள்
தந்தை, மகன் உடலில் அதிக காயங்கள் இருக்கிறது என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் இடம் பெற்றுள்ளது, போலீசாருக்கு எதிரான முக்கிய ஆதாரமாக பார்க்கப்படுகிறது.

கீழே விழுந்து புரண்டார்களாம்
ஏனெனில், காவல்துறையினர் தங்கள் மீது குற்றச்சாட்டு வந்ததும், வேறு மாதிரி ஒரு தகவலை தெரிவித்தனர். பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜை காவல் நிலையம் அழைத்தபோது, தந்தையும் மகனும் கீழே உருண்டு புரண்டு ஆர்ப்பாட்டம் செய்ததாகவும், அதனால் அவர்கள் உடலில் ஊமைக் காயம் ஏற்பட்டதாகவும் போலீஸ் கூறியது.

சிசிடிவி காட்சிகள்
ஆனால், நேற்று ஊடகங்களில் வெளியான, அந்த பகுதி சிசிடிவி காட்சிகளில், போலீசார் அழைத்ததும், அமைதியாக, தந்தை ஜெயராஜ் செல்வதும், பிறகு பென்னிக்சும் புறப்பட்டு செல்வதும், இடம் பெற்றுள்ளது. எனவே அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்ததால் அடிபடவில்லை என்பது உறுதியாகியுள்ளது. அப்படியானால் அவர்கள் எங்கே வைத்து அடிக்கப்பட்டிருப்பார்கள்? என்ற கேள்விக்கான விடை.. போலீசார் சிலரின் கடுமையான தாக்குதல் என்பதுதான்.

திருப்புமுனை
உடல்நலக்குறைவால் மரணமடைந்திருப்பார்கள், அவர்களே உருண்டதால் ஏற்பட்ட ஊமைக் காயத்தால் இறந்திருப்பார்கள் என்றெல்லாம், கதைகள் பரப்பப்பட்டன. ஆனால், இப்போது, பிரேத பரிசோதனையில் தெளிவாக, அவர்கள் இருவர் உடலிலும் நிறைய காயங்கள் இருப்பது அம்பலமாகியுள்ளது. 31 வயது இளைஞன் கூட சாகும் அளவுக்கு அந்த அடி விழுந்துள்ளது. அந்த அளவுக்கு சித்ரவதை செய்யப்பட்டுள்ளனர் என்பது அம்பலமாகியுள்ளது. இது சில போலீசார் நடத்திய மனிதாபிமானம் இல்லாத கொடுமையான தாக்குதலுக்கு எதிராக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. இந்த வழக்கின் திருப்புமுனையாக இந்த பிரேதப் பரிசோதனை அறிக்கை பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications