மதுரை திமுகவில் பனிப்போர்! அமைச்சர் மூர்த்தி Vs சேடப்பட்டி மணிமாறன்! பின்னணி என்ன?
மதுரை: மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான மூர்த்திக்கும், மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சேடப்பட்டி மணிமாறனுக்கும் இடையே பனிப்போர் அதிகரித்திருக்கிறது.
சில நாட்களுக்கு முன்னர் உசிலம்பட்டியில் நடைபெற்ற கறிவிருந்தில் கலந்துகொள்ளச் சென்ற அமைச்சர் மூர்த்தி, இது குறித்த தகவலை மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர் சேடப்பட்டி மணிமாறனிடம் தெரிவிக்கவில்லையாம்.
அமைச்சர் மூர்த்தி மீது இது குறித்த ஆதங்கம் தனக்கிருந்தாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பொறுமை காத்து வருகிறார் சேடப்பட்டி மணிமாறன்.

நிரந்தரம் இல்லை
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; நிரந்தர எதிரியும் இல்லை என்பார்களே, அதற்கு உதாரணமாக மதுரை மாவட்ட திமுகவை கூறலாம். அந்தளவுக்கு அங்கு திடீர் திடீரென அரசியல் வானிலை மாறிக்கொண்டே இருக்கிறது. மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருப்பவர் முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவின் இளையமகன் சேடப்பட்டி மணிமாறன். கட்சியில் திருமங்கலம், உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகள் இவரது நிர்வாகத்தின் கீழ் வருகிறது.

அமைச்சர் மூர்த்தி
இந்நிலையில் அமைச்சர் என்கிற முறையில் மதுரை மாவட்டம் முழுவதும் விசிட் அடித்து வருகிறார் மூர்த்தி. இதனால் அவருக்கு தெற்கு மாவட்ட திமுகவிலும் கணிசமான எண்ணிக்கையில் ஆதரவாளர்கள் வட்டம் பெருகிவருகிறது. அண்மையில் கூட உசிலம்பட்டியில் கட்சி நிர்வாகி ஒருவர் நடத்திய கறிவிருந்தில் கலந்துகொண்டார் அமைச்சர் மூர்த்தி. ஆனால் தனது மாவட்ட எல்லைக்குள் அமைச்சர் மூர்த்தி இவ்வாறு அடிக்கடி வருவதும் தன்னிடம் தகவல் அளிக்காமலேயே கட்சி நிர்வாகிகள் இல்ல விழாக்களில் கலந்துகொள்வதும் சேடப்பட்டி மணிமாறனுக்கு பிடிக்கவில்லை.

அமைச்சர் பிடிஆர்
ஏற்கனவே அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தரப்புக்கும் அமைச்சர் மூர்த்தி தரப்புக்கும் மதுரையில் ஏழாம் பொருத்தமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இப்போது சேடப்பட்டி மணிமாறனோடும் முரண்பட்டு நிற்கத் தொடங்கியுள்ளது அமைச்சர் மூர்த்தியின் முகாம். ஏற்கனவே கோ.தளபதி, பொன்.முத்துராமலிங்கம் என ஆளுக்கொரு கோஷ்டிக்காணம் பாடும் மதுரையில், இப்போது உருவாகியுள்ள இந்த புதிய பனிப்போரை தலைமை ரசிக்கவில்லை.

உள்ளாட்சித் தேர்தல்
ஒரு காலத்தில் ஒற்றுமையாக கட்சிப் பணியாற்றிய அமைச்சர் மூர்த்திக்கும், சேடப்பட்டி மணிமாறனுக்கும் எப்போதிருந்து கருத்து வேறுபாடு எழத் தொடங்கியது என நாம் விசாரித்ததில், உள்ளாட்சித் தேர்தல் காரணமாக கூறப்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முக்கியப் பதவியிடங்களுக்கு யாரை நிறுத்துவது என்பதில் தான் வில்லங்கமே உருவானதாம்.












Click it and Unblock the Notifications