குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.. 3 மாசம் டைம்! டாஸ்மாக் கடையை மூட வேண்டும்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மதுரை: சாத்தான்குளம் தாலுகா தர்மபுரி பகுதியில் கிறிஸ்தவ வழிபாட்டு தலம் மற்றும் அம்மன் கோவில் அமைந்துள்ள பகுதியில் டாஸ்மாக் கடையை இட மாற்றம் செய்ய உத்தரவிட கோரிய வழக்கில், பள்ளி, கல்லூரி , வழிபாட்டுதலங்கள் அருகில் டாஸ்மாக் கடைகளை வைப்பது ஏன்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மூன்று மாதங்களில் டாஸ்மாக் கடையை அகற்ற உத்தரவிட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் முத்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "சாத்தான்குளம் தாலுகா தர்மபுரி பகுதியில் கிறிஸ்தவ வழிபாட்டு தலம் மற்றும் அம்மன் கோவில் அமைந்துள்ள பகுதியில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்கு உள்ளாக டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டது.

அதனை அடுத்து ஊராட்சிமன்ற கூட்டத்தில் டாஸ்மாக் கடையை அகற்றுமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது தொடர்பாக மதுரை அமர்வில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றம் கடையை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட்டது.
இந்நிலையில், ஏற்கனவே கடை அமைந்த இடத்திற்கு எதிர்ப்புறத்தில் கடை திறக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.வழிபாட்டு தலங்களில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்குள் டாஸ்மாக் கடைகளை அமைப்பது சட்டவிரோதமானது. ஆகவே தூத்துக்குடி மாவட்டம் தர்மபுரி பகுதியில் டாஸ்மாக் கடையை திறக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி முகமது சபிக் அமர்வு, "பள்ளி, கல்லூரி , வழிபாட்டுதலங்கள் அருகில் டாஸ்மாக் கடைகளை வைப்பது ஏன்? என கேள்வி எழுப்பினர். அப்போது அரசு தரப்பில், " 6 மாதங்களுக்குள்ளாக, அந்த டாஸ்மாக் கடை அகற்றப்படும்" என தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், " 3 மாதங்களுக்குள்ளாக டாஸ்மாக் கடையை அகற்ற உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
டாஸ்மாக்: தமிழக அரசின் மதுவிலக்கு ஆயத் தீர்வு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் டாஸ்மாக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது இதன் மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 2000க்கும் மேற்பட்ட மதுபான கடைகளும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களும் செயல்பட்டு வருகிறது. டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் சில்லறை விற்பனை வாயிலாக ஒரு நாளைக்கு சராசரியாக 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கும் நிலையில் வார விடுமுறை மற்றும் தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் பல மடங்கு விற்பனை அதிகரிக்கும்.
இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் வழிபாட்டுத் தலங்கள், குடியிருப்புகள் அருகிலேயே டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் மதுபான கூடங்கள் செயல்பட்டு வருகிறது. இதனால் குடிமகன்கள் அட்டகாசத்தால் மக்கள் குறிப்பாக பெண்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனால் அவற்றை அகற்ற வேண்டுமென பல இடங்களில் போராட்டங்களும் நடைபெற்றுள்ளன.
விதி என்ன?: மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், வழிபாட்டு தலம் அல்லது கல்வி நிறுவனங்களில் இருந்து, 50 மீட்டர் துாரத்திற்குள்ளும், பிற பகுதிகளில், 100 மீட்டர் துாரத்திற்குள்ளும் மது கடைகள் அமைக்கப்பட கூடாது. மேலும், மது கடைகளை எந்த இடத்தில் அமைக்க வேண்டும் என்பது தொடர்பாக, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலும் பின்பற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications