மதுரையில் ரூ.46 லட்சம்.. 52 சவரன் நகை கொள்ளை... கூரியர் ஊழியர் போல் நடித்து துணிகரம்
Recommended Video
மதுரை: மதுரையில் கூரியர் ஊழியர் போல வீட்டிற்குள் நுழைந்து வீட்டின் உரிமையாளரை கை,கால்களை கட்டி போட்டு ரூ.46 லட்சத்தையும், 52 பவுன் நகையையும் கொள்ளையடித்துச் சென்ற 2 பேரை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
மதுரை மேல அனுப்பானடி சின்னகண்மாய் அரவிந்த் நகரை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 67). இவர் ஒரு பள்ளிக்கூட நிர்வாக கமிட்டி உறுப்பினராகவும், மாட்டுத் தீவனம் தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளராகவும் உள்ளார்.
இந்நிலையில் இன்று மதியம் அவரது வீட்டிற்கு இரு நபர்கள் தலையில் ஹெல்மெட் அணிந்தவாறு வீட்டின் கதவை தட்டி கொரியர் ஊழியர் என கூறிய நிலையில் வெற்றிவேலின் மனைவி கதவை திறந்தபோது வாயில் டேப்டை வைத்து அடைத்தவிட்டு வெற்றிவேல் மற்றும் அவரது மனைவி, மருமகள் அணிந்திருந்த 52 பவுன் நகையையும் , வீட்டின் முதல் தளத்தில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 46 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். பட்டபகலில் கூரியர் ஊழியர்கள் வேடத்தில் கொள்ளை சம்பவம் நடந்தேறியது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொள்ளை நடைபெற்ற இடத்தில் போலீசார் கைரேகை நிபுணர்களுடன் தற்போது விசாரணை நடத்தி வருவதோடு அப்பகுயில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். கொள்ளையில் ஈடுபட்டவர்கள் தடயங்களை மறைக்க வேண்டும் என்பதற்காக மிளகாய்பொடிகளை தூவிவிட்டு சென்றுள்ளனர்.
கொள்ளையர்கள் தப்பிச்சென்ற மோட்டார் சைக்கிளில் முன்பும், பின்பும் நம்பர் பிளேட் இல்லாமல் இருந்ததும், கொள்ளையர்கள் இருவரும் சுமார் 30 வயதுடையவர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும் விசாரணையில், தொழில் அதிபர் வீட்டில் பணம் வைத்திருக்கும் இடத்தை நன்கு அறிந்தவர்கள்தான் கைவரிசை காட்டி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.