என்னடா இது மதுரகாரங்களுக்கு வந்த சோதனை! லோனே வாங்கல..வட்டியோட கட்டணுமா? பீடா பாய்ஸ் டார்ச்சர்..உஷார்
மதுரை: மதுரையில் கடந்த சில நாட்களாக பெரும் வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுனர்களை குறித்து வடமாநில மோசடி கும்பல்கள் இணைய வழி பணத்திருட்டில் ஈடுபட்டு வருவதாக அதிகளவில் புகார்கள் பதிவாகின்றன. இந்நிலையில் சென்னையில் பிரபல கார் நிறுவனத்தின் தொலைபேசி எண் ஹேக் செய்து, மதுரை இளைஞர்களுக்கு லோன் கட்ட சொல்லி தொலைபேசியில் வரும் அச்சுறுத்தல்களால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மதுர காரனுக்கு வந்த சோதனையா என்று எண்ணக்கூடிய வகையில் கடந்த சில நாட்களாகவே மதுரையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள், நிறுவனங்களில் பணி செய்யும் மேலாளர்கள், பணியாளர்களை தொடர்ந்து தற்போது யூட்யூப் சேனல் உரிமையாளர்களை குறிவைத்து ஆன்லைனில் நூதன மோசடியில் ஈடுபடக் கூடியவர்கள் அதிகரித்து வருகிறார்கள்

கடந்த சில மாதத்திற்கு முன்னதாக ஆன்லைன் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பண பரிவர்த்தனை செய்தது போன்ற நூதன மோசடி செய்த வட மாநிலத்து கும்பல் இருந்து வந்தது. தற்போது டயர் விற்பனை செய்யும் மேலாளர்களுடைய எண்களுக்கு இதே மோசடி கும்பல் தங்களது கைவரிசையை காட்டியது.
இந்நிலையில் நேற்று மதுரையைச் சேர்ந்த டப்பிங் ஸ்டுடியோ உரிமையாளர் டேவிட் என்பவருடைய எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் வந்த குறுந்தகவலில், தாங்கள் வாங்கிய லோனுக்கு உடனடியாக பணத்தை கட்ட வேண்டும். அப்படி இல்லை என்றால் உங்கள் வீட்டில் இருப்பவர்களை நாங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய நிலைக்கு சென்று விடுவோம் என மிரட்டும் தொனியில் அந்த மெசேஜ் இருந்தது. அதோடு தாங்கள் பணம் கட்டி விட்டால் பணத்திற்குரிய அந்த 12 இலக்க யூடிஆர் எண்ணை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் கிளிக் செய்து அப்லோடு செய்ய வேண்டும் என்றும் இருந்தது.

சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வரக்கூடிய இது போன்ற மோசடிகளை தெரிந்த அவர் சற்றே சுதாரித்துக் கொண்டு உடனடியாக அந்த எண்களை பிளாக் செய்துவிட்டார். முன்னதாக அந்த தொலைபேசி எண்ணிற்கு அழைத்துப் பேசுகையில் அது கர்நாடக மாநிலத்தில் உள்ள பசந்த் நகர் என்னும் பகுதி என்றும், அது ஹூண்டாய் நிறுவனத்துடைய டீலர் அலுவலகம் என்றும் தெரியவந்தது.
தொடர்ந்து எதிர்தரப்பிலிருந்து பேசிய பின் நாங்கள் எதுவும் அப்படி அனுப்பவில்லை அப்படி அனுப்பி இருந்தால் மீண்டும் அந்த மெசேஜை எங்களுக்கு ஸ்கிரீன்ஷாட் அனுப்புங்கள் என்று கூறினர். மீண்டும் வேறு ஒரு எண்ணில் இருந்து அதே எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது ஆண் ஒருவர் பேசுகையில் இது தங்களுடைய அலுவலக எண் என்றும், காவல்துறைக்கு செல்ல வேண்டாம் நாங்களே இதை பார்த்துக்கொள்கிறோம் என்றும் தெரிவித்தார். மேலும் தங்களுடைய மொபைலில் ஹேக் செய்யப்பட்டதாகவும் விரைவில் இதை சரி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
சற்றே சுதாரித்துக்கொண்ட டேவிட் சுரேஷ், ஒரே மாதிரியான மெசேஜ்கள் வெவ்வேறு நம்பரில் இருந்து எவ்வாறு வந்தது என்பதற்கு அவர்கள் தரப்பிலிருந்து பதில் எதுவும் இல்லை. உண்மையிலேயே கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கார் நிறுவனத்தின் மொபைல் நம்பர் ஹேக் செய்யப்பட்டதா? இல்லை நூதனமாக தொழில் செய்யும் நபர்களை மோசடி செய்யும் கும்பல் தற்போது புதியதொரு திட்டத்தை கையில் எடுத்துக் கொண்டதா? என கேள்விகள் எழுந்துள்ளது.
இந்த நிலையில் தனக்கு வந்த இந்த எஸ்எம்எஸ் குறித்து மதுரையில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்க உள்ளார் சுரேஷ். மேலும் மதுரையைச் சேர்ந்த பிற நபர்களுக்கும் இதேபோன்று வாட்ஸ் அப் மூலம் குறுஞ்செய்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தங்களுக்கும் இதுபோன்ற ஏமாற்று மெசேஜ்கள் வந்தால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டுமென்கின்றனர் சைபர் கிரைம் போலீசார்.












Click it and Unblock the Notifications