''பா.ஜ.க தனித்து நின்று ஜெயிக்கட்டும் பார்ப்போம்.. வாய்ப்பே இல்ல ராஜா ''.. சொல்கிறார் திருமாவளவன்!
மதுரை : பாஜக வெற்றி பெற்ற 4 தொகுதிகளில் விழுந்த ஓட்டுகளும் அதிமுகவுக்கு விழுந்த ஓட்டுக்கள்தான் என்று தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
"சீக்ரெட்".. இதான் சீமான்.. மாயமில்ல, மந்திரமில்ல.. அதிமுகவை கதற விட்டு.. டாப் கியர் போட்டு.. செம!
மக்கள் மரண அடி
சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை வழங்கிய தமிழக மக்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அசாம், புதுச்சேரி ஆகிய இரண்டு மாநிலங்களைத் தவிர மேற்குவங்கம், தமிழ்நாடு, கேரளா ஆகிய மூன்று பெரிய மாநிலங்களிலும் பாரதிய ஜனதாவும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் மக்கள் மரண அடி கொடுத்து பாடம் புகட்டி உள்ளனர்.
அதிமுகவுக்கு விழுந்த ஓட்டு
தமிழகத்தில் 2001-ல் பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 20 வருஷம் கழித்து 4 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றுள்ளது. தற்போது கிடைத்துள்ள வெற்றியும் முழுக்க முழுக்க அதிமுகவிற்கு விழுந்த ஓட்டுகள் தான். பா.ஜ.க.வால் சொந்த காலில் நின்று வெற்றி பெற முடியாது. சனாதன எதிர்ப்பை முன்னிறுத்தி ஜனநாயகத்தை பாதுகாக்க தமிழ்நாட்டு மக்களுக்கு அறைகூவல் விடுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 இடங்களில் நான்கு தொகுதிகளில் வெற்றியை வழங்கியுள்ளனர். நாங்கள் இரண்டு பொதுத்தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளோம்.
சமூக நீதி பாதுகாக்கும்
விடுதலை சிறுத்தைகளை ஒரு குறிப்பிட்ட அடையாளத்துக்குள் முடக்கி தனிமைப்படுத்திட முயற்சித்த சாதிய மதவாத சக்திகளுக்கு பாடம் புகட்டும் கூடியவகையில் இந்த வெற்றியை வழங்கிய மக்களுக்கு எனது சிறப்பான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாளை மறுநாள் முதல் அமைச்சராக பொறுப்பேற்க உள்ள அண்ணன் தளபதி ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம் அவருடைய ஆட்சி நல்லாட்சி அமைய சமூக நீதியை பாதுகாக்கும் அரசு அமைய விடுதலைச் சிறுத்தைகள் முழுமையாக ஒத்துழைக்கும்.
மாநில உரிமைக்கு எதிரானது
திமுக ஆட்சி முன்னெடுக்க கூடிய அனைத்து முயற்சிகளுக்கும் குறிப்பாக மாநில உரிமைகள் மீட்பு மொழி இன நலன்கள் பாதுகாப்பு விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் என்று அனைத்து முயற்சிகளுக்கும் விடுதலைச்சிறுத்தைகள் முழுமையான ஒத்துழைப்பை நல்கும். மராத்தா சமூகத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு சமூக நீதிக்கு எதிராகவும் மாநில உரிமைகளுக்கு எதிராகவோ அமைந்திருக்கிறது.
தமிழக அரசுக்கு கோரிக்கை
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கிய இட ஒதுக்கீட்டை ரத்து செய்திருக்கிறது. பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தொடர்பான இட ஒதிக்கீடு முடிவுகளை மாநில அரசுகள் மேற்கொள்ள இயலாது என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கிய இந்த சூழலில், தமிழக அரசு இந்த தீர்ப்பை எதிர்த்து உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.
முதன்மை சவால்
திமுக ஆட்சிக்கு கொரோனா முதன்மையான ஒரு சவால் கொரோனா நெருக்கடியை எதிர்கொள்வது என்பதுதான். ஐசியு போன்ற தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏராளமானவர்கள் அனுமதிக்கப்பட முடியாத நிலை உள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் செங்கல்பட்டு மருத்துவமனையில் 11 பேர் இறந்து விட்டார்கள் என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
ஊரடங்கு வேண்டும்
உயிர்காக்கும் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி மருந்து கூடுதலான விலைக்கு பல மடங்கு விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வரும் தகவல்களுக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனவை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மைய அரசு தனித்து இதில் எந்த சாதனையும் சாதித்துவிட முடியாது. பொதுமக்களும் கடுமையாக உழைக்க வேண்டும். ஊரடங்கால் பொருளாதார நெருக்கடி ஏற்படலாம். ஆனால் அதைவிடவும் உயிரை காப்பாற்றுவது முக்கியமானது. எனவே முழு ஊரடங்கு தேவைப்பட்டால். மைய மாநில அரசுகள் அதை செய்ய வேண்டும். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.