இடஒதுக்கீட்டை அழிக்கும் மோடியே திரும்பி போ…மதுரையில் போராட்டம்.. திருமுருகன் காந்தி, முகிலன் கைது
மதுரை:பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை பெரியார் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட திருமுருகன் காந்தி, முகிலன் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை தோப்பூரில் பல வசதிகள் அடங்கிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. இந்த மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி மதுரை வந்தார்.
அதற்காக மதுரை விமான நிலையத்திற்கு அருகே உள்ள மண்டேலா நகரில் இதற்கான பிரமாண்ட விழா மேடை அமைக்கப்பட்டது. விழாவில் மோடி அவர்கள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மட்டுமல்லாமல், தஞ்சை, நெல்லை ஆகிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை மேம்படுத்தும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
முன்னதாக மதுரை வந்த பிரதமர் மோடிக்கு வைகோ, திருமுருகன் காந்தி, முகிலன் உள்ளிட்ட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மதுரைக்கு வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, பெரியார் பேருந்து நிலையம் அருகே வைகோ, திரு முருகன் காந்தி உள்ளிட்டோர் கருப்புக்கொடி, கருப்பு பலூன் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மோடிக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், இயற்கை எங்களை வஞ்சித்த போது ஒப்புக்காக கூட பிரதமர் மோடி வந்து பார்வையிட்டு இருக்கலாம். தமிழகத்தின் இயற்கையையும், விவசாயத்தையும் அழிக்க வேண்டும் என நினைக்கின்றனர் என்று வைகோ பேசினார்.
பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை பெரியார் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட திருமுருகன் காந்தி, முகிலன் உட்பட 100க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தபெதிக உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சமூக நீதியை அழிக்கும் மோடியே திரும்பிப்போ என்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
போராட்டத்தின் போது கோவை ராமகிருட்டிணன் பேசியதாவது: பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீட்டை பிரதமர் மோடி அழிக்கிறார். கஜா புயலின் போது பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு ஆறுதல் கூற மோடி வரவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் என்ற பெயரில் மோடி தேர்தல் பிரச்சாரம் செய்ய வருகிறார் என்று கடுமையாக குற்றச்சாட்டினார்.