திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம்.. பாஜக வாக்குறுதியை சொல்லி வாக்கு சேகரித்த ராஜன் செல்லப்பா!
மதுரை: திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என்ற பாஜகவின் வாக்குறுதியை கூறி அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இது அதிமுகவினர் மத்தியில் எடுபடுமா என்ற கேள்வி எழுந்துள்ளதோடு, பாஜகவின் வாக்குறுதியை கூறி அதிமுக வாக்கு சேகரிப்பதா என்ற விரக்தியையும் அக்கட்சியினர் மத்தியில் பேசப்படுகிறது.
தமிழக பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தீபம் ஏற்றும் பாரம்பரியம் மீண்டும் தொடங்கப்படுவதையும், அது காலம் முழுவதும் பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்வோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழக அரசியலில் விவாதமாகி இருக்கிறது.

ஏனென்றால் திருப்பரங்குன்றம் விவகாரம் மதுரை மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் மத நல்லிணக்கம் குறித்த பிரச்சனையாக மாறி இருக்கிறது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட போதும், தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதேபோல் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாததற்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொண்டு வருகிறது.
இந்த விவகாரத்தில் அதிமுக தரப்பில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையோடு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். இதையடுத்து அதிமுகவினர் அதிக ஆர்வம் காட்டிக் கொள்ளவில்லை. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பாக ராஜன் செல்லப்பா மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ராஜன் செல்லப்பா தனது தேர்தல் பிரச்சாரத்தில் பேசுகையில், ஒவ்வொரு பூத்திற்கு வாக்களிக்க செல்லும் போதும் இரட்டை இலை சின்னத்தில் மனதில் வைக்க வேண்டும். நாம் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். அந்த எண்ணத்துடன் செல்கிறோம். அதுதான் நீதிமன்றத்தின் உத்தரவு. அதனை செயல்படுத்த வேண்டும்.
இரட்டை இலை சின்னத்திற்கு முத்திரையிட்டு வெற்றிபெற வைத்தால் உங்களுக்கு பரிசுகள் காத்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார். மதுரை திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பெரும்பாலான மக்கள் தீபம் ஏற்ற வேண்டும் என்ற வேண்டுகோளினை வைக்கவில்லை. திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்று போராடியவர்களை கைது செய்த போது, கைதட்டி கொண்டாடினார்கள் அந்தப் பகுதி மக்கள்.
இப்படியான சூழலில் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா பாஜகவின் தேர்தல் வாக்குறுதியை கூறி வாக்கு சேகரித்து வருகிறார். இது அதிமுகவுக்கு பின்னடைவை உருவாக்கும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கப்பாண்டிக்கு களத்தை சாதகமாக ராஜன் செல்லப்பா அமைத்து கொடுப்பதாகவும் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications