திருப்பரங்குன்றம் தீப விவகாரம்.. 2014 தீர்ப்பை மேற்கோள் காட்டிய அமைச்சர்! தீர்ப்பு சொன்னது என்ன?
மதுரை: திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் 2014ம் ஆண்டு தீர்ப்பை தமிழ்நாடு அரசு பின்பற்றுகிறது என்று அமைச்சர் ரகுபதி விளக்கமளித்திருக்கிறார். 2014 தீர்ப்பு என்ன சொன்னது? அதில் வைக்கப்பட்டிருக்கும் வாதங்கள் என்ன என்பதை பார்ப்போம்.
கடந்த 2014 ஆம் ஆண்டு சுப்பிரமணியன் என்பவர், திருப்பரங்குன்றத்தில், வழக்கமாக தீபம் ஏற்றும் உச்சி பிள்ளையார் கோவில் அருகே தீபம் ஏற்றக்கூடாது என்றும், அதற்கு மாறாக சிக்கந்தர் தர்கா அருகில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும், அதுவே ஆகம விதிப்படி சரியானது என்றும் கூறி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி வேணுகோபால் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. ஆகம விதிப்படி தர்காவுக்கு பக்கத்தில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதுதான் சரியானது என்று சொல்கிறீர்கள், அப்படி எனில் இது ஆகமத்துக்கு புறம்பானது என்பதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யுங்கள், என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே வழக்கை அதே ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் தேதி அன்று நீதிபதி (வழக்கு எண்: WP(MD)No.19422 of 2014) தள்ளுபடி செய்திருந்தார்.
ஆனால், இந்த தள்ளுபடியை எதிர்த்து சுப்பிரமணியன் மேல்முறையீடு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மதுரை உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வான நீதிபதிகள் கல்யாண சுந்தரம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையில், கோவில் நிர்வாகமும், தர்கா நிர்வாகமும் இந்த விஷயத்தில் முடிவெடுத்து பல ஆண்டுகளாக அமைதியான முறையில் உச்சிப்பிள்ளையார் கோவில் தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்றி வருகிறது. அதேபோல தர்கா அருகில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பதற்கான ஆகமமும் எதுவும் இல்லை. எனவே அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்க தேவையில்லை.
வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோவில் தீப தூணில், கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்று 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் தேதி நீதிபதிகள் தீர்ப்பளித்திருந்தனர். (வழக்கு எண்: WA(MD)No.1524 of 2014)
நீதித்துறை வரலாற்றை பொறுத்தவரை, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு உயர்நீதிமன்றமும், இரு நீதிபதிகள் கொண்ட தீர்ப்புக்கு ஒரு நீதிபதியும் கட்டுப்பட்டவர். இதை ஆங்கிலத்தில் JUDICIAL DISCIPLINE என்று சொல்வார்கள். அதேபோல ஏற்கெனவே தீர்த்து வைக்கப்பட்ட ஒரு வழக்கை வேறு காரணங்களை சொல்லி மீண்டும் தொடங்க முடியாது. இதை CONSTRUCTIVE RESJUDICATA என்று சொல்வார்கள்.
தற்போது வழக்கு தொடுத்துள்ள ராம ரவிக்குமார் என்பவர், தர்காவுக்கு பக்கத்தில் இருக்கும் கல் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று கோவில் நிர்வாகத்திடம் மனு அளித்திருந்தார். அதை பரிசீலித்த நிர்வாகம், பல ஆண்டுகளாக தீபம் ஏற்றும் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே தீபம் ஏற்றுவோம் என்று கூறி அவரது கோரிக்கையை ஏற்க மறுத்தது. இதனை அடுத்து ராம ரவிக்குமார் நீதிமன்றத்தை நாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications