"நான் அரசியலுக்கு வரேனா? என்கிட்ட இப்போ நேரடியா சொல்லுங்க பார்க்கலாம்" கோபமடைந்த நீதிபதி சுவாமிநாதன்
மதுரை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது முந்தைய நாள் விசாரணையில் நீதிபதி சுவாமிநாதன் தேர்தலில் போட்டியிடுவார் என வழக்கறிஞர் விகாஸ் சிங் கூறியது நீதிபதி சுவாமிநாதன் நேரடியாகவே கேள்வி எழுப்பினார். இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பரங்குன்றம் மலையின் மீது தீபம் ஏற்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தத் தவறியதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கைத் தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் விசாரித்து வருகிறார். இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

இப்போ சொல்லுங்க
அப்போது தமிழக அரசு சார்பில் காணொளிக் காட்சி வழியாக மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் ஆஜரானார். அவர் வாதிட ஆரம்பித்தபோது இடைமறித்த நீதிபதி சுவாமிநாதன், முந்தைய நாள் நீதிமன்ற விசாரணையில் வைத்த வாதம் குறித்து கேள்வி எழுப்பினார். அதாவது முந்தைய நாள் பிரதான வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனு விசாரணையின்போது தமிழ்நாடு காவல்துறை சார்பில் ஆஜரான விகாஷ் சிங், "நீதிபதி (சுவாமிநாதன்) என்ன செய்கிறார் என்றே புரியவில்லை. அவர் விரைவில் அரசியலுக்கு வந்து தேர்தலில் கூட போட்டியிடலாம்" என்று கூறியிருந்தார்.
இருப்பினும், விகாஸ் சிங் முதலில் நீதிபதி எதைக் குறிப்பிடுகிறார்கள் என்று தனக்குத் தெரியவில்லை என்றார். தான் தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டிருப்பதாக விகாஸ் சிங் முன்வைத்த வாதங்களைப் பற்றியே கேட்பதாக நீதிபதி சுவாமிநாதன் கூறினார். அவர் மேலும், "இதை நான் செய்தித்தாள்களில் படித்தேன்... இப்போதும் அதை மீண்டும் சொல்லுங்களேன்" என வலியுறுத்தினார்.
வழக்கறிஞர் பதில்
இருப்பினும், அது தொடர்பாக எந்தவொரு கருத்தும் கூற விரும்பவில்லை என்று விகாஸ் சிங் பதிலளித்தார். இருப்பினும் நீதிபதி, "நேற்று இரு நீதிபதிகள் அமர்வுக்கு முன்னால் நீங்கள் குறிப்பிட்ட வார்த்தைகளை இப்போதே எனக்கு முன்னால் சொல்லுங்களேன்?" என்று நீதிபதி சுவாமிநாதன் கேட்டார். விகாஸ் சிங் அந்தக் கருத்துக்களை மீண்டும் கூற மறுத்து, "இல்லை. நான் விரும்பவில்லை" என்று மட்டும் பதிலளித்தார்.
நேரில் ஆஜர்
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டதாகச் சொல்லி சம்மன் அனுப்பப்பட்டதை அடுத்து, இந்த வழக்கு விசாரணையில் தலைமைச் செயலாளர் நீதிமன்றத்தில் ஆஜரானார். திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுகளை மாவட்ட அதிகாரிகள் ஏன் செயல்படுத்தவில்லை என்பதற்கு விளக்கம் அளிக்குமாறு தலைமைச் செயலாளர் என். முருகானந்தத்திற்கு நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டார்..
மேலும், அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் தான் பிறப்பித்த உத்தரவை மாவட்ட ஆட்சியர்கள் செயல்படுத்தத் தவறியதை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது என்றும் நீதிபதி தெரிவித்தார். ஆட்சியர்கள் சுயமாக செயல்பட்டார்களா அல்லது உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் இப்படி செயல்பட்டார்களா என்பதை விளக்குமாறு தலைமைச் செயலாளரிடம் கேட்டார்.
நோக்கமில்லை
இதற்குப் பதிலளித்த முருகானந்தம், அதிகாரிகளிடமிருந்து தேவையான விவரங்களைப் பெற்று எழுத்துப்பூர்வமான பதில் அளிப்பதாகத் தெரிவித்தார். இதற்கு 4 வார காலம் அவகாசம் கோரினார். அதேநேரம் எந்தவொரு உத்தரவையும் பின்பற்றாமல் இருக்க வேண்டும் என்பது தமிழக அரசின் நோக்கம் இல்லை என்று தலைமைச் செயலாளர் விளக்கமளித்தார். இது தொடர்பாக விரிவான விளக்கத்தைப் பதில் மனுவாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி சுவாமிநாதன், வழக்கு விசாரணையை ஜனவரி மாதம் ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications