நயினார் நாகேந்திரன், எச்.ராஜா கைது! திருப்பரங்குன்றத்தில் பதற்றம்! போராட்டத்தில் குதித்த பாஜகவினர்!
மதுரை: திருப்பரங்குன்றத்தில், தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருக்கிறார். இந்நிலையில், திருப்பரங்குன்றத்தை நோக்கி பாஜகவினர் அதிக அளவில் திரண்டிருந்தனர். இந்நிலையில் அவர்களை மலை மீது ஏறவிடாமல் காவல்துறை தடுத்துள்ளது. 144 தடை உத்தரவு ரத்துக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்கிறது. எனவே பாஜகவினர் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் தற்போது நயினார் நாகேந்திரன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
நீதிமன்ற உத்தரவையடுத்து தீபம் ஏற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்திற்கு வந்திருந்தார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "எங்களுக்கு தீப தூணில் தீபம் ஏற்ற வேண்டும் அவ்வளவுதான். நீதிமன்றம் உத்தரவின் பேரில் நாங்கள் வந்திருக்கிறோம். தமிழக அரசு மேல்முறையீடு போகலாம். அதில் எங்களுக்கு மாற்று கருத்து இல்லை. திமுக அரசின் செயல்பாட்டை இஸ்லாமியர்களே விரும்பவில்லை" என்று கூறியிருந்தார்.

நீதிமன்றம் உத்தரவிட்டதால் பாஜகவினர், இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் மலைக்கு கீழ் குவிந்தனர். ஆனால், தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளதால் பாஜகவினருக்கு மலை மீது ஏற அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
போலீசார் பேச்சை கேட்காமல் சிலர் மலை மீது ஏற முயன்றதால் போலீசாருக்கும், பாஜகவினருக்கும் இடையே லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டிருக்கிறது. 144 உத்தரவுக்கு எதிராக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, தமிழக அரசு மேல் முறையீடு செய்ய உள்ளதால், கூட்டம் கூட வேண்டாம் என போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். கலைந்து செல்லவில்லை எனில் கைது செய்ய நேரிடும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர். ஆனால் பாஜகவினர், இந்து முன்னணியினர் கலைந்து செல்லவில்லை.
மாறாக சாலையில் அமைந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர சம்பவ இடத்தில் சுமார் 500க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டிருக்கின்றனர். எவ்வளவு அறிவுறுத்தியும் பாஜகவினர் கலைந்து செல்லவில்லை. இதனையடுத்து தற்போது பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
நயினார் நாகேந்திரனுடன், எச்.ராஜா மற்றும் பாஜக, இந்துத்துவா அமைப்பினர் சிலரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications