திருப்பரங்குன்றம்..நீதிபதி சுவாமிநாதன் விசாரணைக்கு தடைவிதிக்க முடியாது- ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள்
மதுரை: திருப்பரங்குன்றத்தில் மலை உச்சியில் தீபம் ஏற்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், காரசார வாதம் முன்வைக்கப்பட்டது. இதில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் விசாரிக்கும் நிலையில், அதற்குத் தடை விதிக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. இருப்பினும், தனி நீதிபதி விசாரணைக்குத் தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் முதன்மை வீடான திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பாகச் சர்ச்சை எழுந்துள்ளது. எப்போதும் உச்சி பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றப்படும் நிலையில், மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என ராம ரவிக்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் மதுரைக் கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார்.

இரு வழக்குகள்
இருப்பினும், இந்தாண்டு உச்சி பிள்ளையார் கோயிலுக்கு அருகிலேயே தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதில் இப்போது இரு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. முதலில் மலை உச்சியில் தீபம் ஏற்ற நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த பிரதான வழக்கின் மேல்முறையீடு. இந்த வழக்கை நீதிபதிகள் ஜி ஜெயச்சந்திரன் மற்றும் நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கிறது. இது தவிர நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தத் தவறியதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தனியாக நடக்கிறது. அதை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனே விசாரிக்கிறார்.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் பிரதான வழக்கின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஜி ஜெயச்சந்திரன் மற்றும் நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன் விசாரித்து வருகிறார்கள். இன்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தர்கா தரப்பிலும் வக்பு வாரியம் தரப்பிலும் பல்வேறு முக்கிய வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இன்று காரசார வாதங்கள் நடைபெற்றது.
மறுப்பு
இந்தச் சூழலில் தான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தனி நீதிபதி விசாரணைக்குத் தடை விதிக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. இருப்பினும், தற்போதைய நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனச் சொல்லி, தனி நீதிபதி விசாரணைக்குத் தடை விதிக்க ஐகோர்ட் மதுரை அமர்வு நீதிபதிகள் மறுத்துவிட்டனர். இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து நடக்கும்.
நீதிபதிகள்
அந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது தலைமைச் செயலர், ஏடிஜிபி நாளை டிசம்பர் 17ம் தேதி ஆஜராக வேண்டும் என நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். ஆஜராவதில் இருந்து விலக்கு தருமாறு இன்றைய தினம் நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் முன்பு அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதையும் ஏற்க மறுத்த நீதிபதிகள், தனி நீதிபதியிடமே இந்தக் கோரிக்கையைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள், நாங்கள் உத்தரவிட முடியாது எனச் சொல்லி மறுத்துவிட்டனர்.
போலீஸ் தரப்பு
முன்னதாக இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது போலீசார் தரப்பில் சில முக்கிய வாதங்கள் முன்வைக்கப்பட்டது. போலீசார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விகாஸ் சிங், "திருப்பரங்குன்றம் வழக்கில் சூழ்நிலை எவ்வளவு துரதிஷ்டமானது என்பதை நீதிமன்றம் விரைவில் உணரும். நீதிபதி சுவாமிநாதன் விரைவில் அரசியலுக்குள் வருவார். தேர்தலிலும் நிற்பார். நாங்கள் அவருக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானத்தை பற்றிப் பேச விரும்பவில்லை. ஆனால் நீதிபதி சுவாமிநாதன் அரசியலமைப்பின்படி செயல்பட்டுள்ளாரா என்ற கேள்வி இருக்கிறது" என்றார்.












Click it and Unblock the Notifications