Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பரங்குன்றம் மேல்முறையீட்டு வழக்கு: வாதங்கள் நிறைவு.. தீர்ப்பை ஒத்திவைத்த 2 நீதிபதிகள் அமர்வு!

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூண் மீது தீபம் ஏற்ற தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 2 நீதிபதிகள் அமர்வு முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. மேல்முறையீட்டு வழக்கில் வாதங்கள் நிறைவடைந்த நிலையில் தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவதற்கு தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுகளுக்கு எதிராக, கோயில் நிர்வாகம், வக்ஃப் வாரியம், மதுரை மாநகரக் காவல் ஆணையர், மாவட்ட ஆட்சியர் தரப்பில் மேல்முறையீட்டு மனுக்களும், எழுமலையைச் சேர்ந்த ராம.ரவிக்குமார் உள்ளிட்ட சிலர் இடையீட்டு மனுக்களையும் தாக்கல் செய்தனர்.

thirupparankundram high court temple

இந்த மனுக்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு முன் 4 ஆவது நாளாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது, ராம. ரவிக்குமார் உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதங்களை முன்வைத்தன்ர்.

மனுதாரர்கள் தரப்பு வாதத்தில், "திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவது மாநில அரசின் கடமை. இந்த உத்தரவால் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கூறுவது ஏற்புடையதல்ல. மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தவர்கள் தங்களது வாதம் தொடர்பான எந்த ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. மாநில அரசு தனது கடமையை நிறைவேற்றத் தவறி உள்ளது. நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படும் முன்னரே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தை மத பிரச்சனை போல திசை திருப்பியுள்ளனர். தனி நீதிபதியின் உத்தரவை விமர்சிப்பது ஏற்புடையதல்ல. கோயில் நிர்வாகம் தனது சொத்தைப் பாதுகாக்க வேண்டும். தர்கா தரப்பினர் மலை முழுவதும் சிக்கந்தர் மலை என உரிமை கோருகின்றனர். அங்கு ஆடு, கோழி ஆகியவற்றைப் பலியிட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கின்றனர். அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டுத்தான் தனி நீதிபதி உத்தரவிட்டார்." என வாதங்களை வைத்தனர்.

மேலும், "மதுரை மாவட்டம், வரிச்சியூர், நரசிங்கம், கீழக் குயில்குடி, அரிட்டாப்பட்டி, மேலூர், அழகர்கோவில் ஆகிய மலைகளிலும், நாமக்கல், மொடக்குறிச்சி, ஊத்துக்குளி, சிறுமலை, மேல்மலையனூர், குறிஞ்சிப்பட்டி, பழனி, மருதமலை, சுவாமிமலை, திருத்தணி, பச்சரிசி மலை, குரும்பாறை, தாடிக்கொம்பு, சிவன்மலை, சித்தர்மலை ஆகிய மலைகளின் உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்படுகிறது.
திருப்பரங்குன்ற மலை மீதுள்ள உச்சிப் பிள்ளையார் கோயிலில் விநாயகர் இல்லை. அனுமன்தான் உள்ளார். மனுதாரர் ராம. ரவிக்குமார் பொது நலன் கருதியே இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்" என வாதம் வைத்தனர்.

இதையடுத்து, நீதிபதிகள், "இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா?, இல்லையா? என்பதற்கு ஏற்ப மனுதாரர் வாதங்களை முன்வைக்க வேண்டும். மத்திய தொல்லியல் துறை திருப்பரங்குன்றம் மலையை ட்ரோன் மூலம் அளவீடு செய்யக் கோரிய போது, மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை என வாதத்தில் தெரிவித்ததாக நீதிபதி விஜயகுமார் ஏற்கெனவே தெரிவித்துள்ளார். இது உண்மைதானா?" எனக் கேள்வி எழுப்பினர்.

மனுதாரர் தரப்பினர் மேலும் கூறுகையில், "தற்போதைய நடைமுறையானது, கடந்த 100 ஆண்டுகளாகத்தான் கோவில் நிர்வாகம் உச்சிப் பிள்ளையார் கோவில் அருகே உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றி வருகிறது. ஆனால், அதற்கு முன் எந்த இடத்தில் அவர்கள் தீபம் ஏற்றினார்கள் என்ற கேள்வி எழுகிறது" என்று தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, "மலை உச்சியில் தூணில் தீபம் ஏற்றியதற்கு ஆதாரங்கள் உள்ளதா? அனைத்து தரப்பு வாதங்களையும் தனி நீதிபதி கேட்டாரா? அவசர அவசரமாக உத்தரவு பிறப்பித்தது ஏன்? தீபம் ஏற்ற குறுக்கு வழியை கையாண்டது ஏன்?" என மனுதாரர்களுக்கு இரு நீதிபதிகள் அமர்வு கேள்வி எழுப்பியது.

மேலும், "திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவு பிறப்பிக்கலாமா? என கேள்வி எழுப்பினோம். ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என்றே தெரிகிறது." எனத் தெரிவித்தனர். மேலும், வழக்கை இன்று வியாழக்கிழமைக்கு (டிசம்பர் 18) தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

அதன்படி, திருப்பரங்குன்றம் மேல்முறையீட்டு வழக்கு இன்று 2 நீதிபதிகள் அமர்வு முன்பாக 5வது நாளாக விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. வாதங்கள் நிறைவடைந்த நிலையில் தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எழுத்துப்பூர்வமான வாதங்களை நாளைக்குள் வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். தனி நீதிபதி விசாரிக்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு எதிரான மேல்முறையீடு உள்ளிட்ட இது தொடர்பான அனைத்து வழக்குகளும் வரும் ஜனவரி 7 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+