“இன்று 7 தீபம் ஏற்றுங்க.. மார்ச் 2ல் திருப்பரங்குன்றம் கிரிவலம் வாங்க”.. நயினார் நாகேந்திரன் அழைப்பு
மதுரை: திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபமேற்றும் போராட்டத்தின் அடுத்த கட்டமாக மார்ச் 2ஆம் தேதி கிரிவலம் செல்ல பாஜக முடிவு செய்துள்ளது. சதுர்த்தியும், கிருத்திகையும் இணைந்து வரும் இன்று முருகப் பெருமானுக்கு 7 தீபங்கள் ஏற்றுமாறு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையில் மகாதீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வலியுறுத்தி முருக பக்தர்கள் பேரவை சார்பில் இன்று 23ஆம் தேதி மாலை 6 மணி முதல் 7 மணி வரை தமிழகம் முழுவதும் கந்த சஷ்டி பாராயணம் செய்ய உள்ளனர். அனைவரும் விளக்கேற்றி கந்த சஷ்டி கவசம் பாட வேண்டும் என தமிழக பாஜக கேட்டுக்கொண்டுள்ளது.

அதோடு, வரும் மார்ச் 2-ஆம் தேதி பௌர்ணமியன்று, மாலை வேளையில் திருப்பரங்குன்ற மலையில் கிரிவலம் வருவதற்கும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அனைவருக்கும் வணக்கம்! திருப்பரங்குன்ற தீபத்தூணில் கார்த்திகை தீபமேற்ற வேண்டுமென நாம் தொடர்ந்து போராடி வருகிறோம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
இந்தப் போராட்டத்தின் அடுத்தகட்டமாக, சஷ்டியும் கிருத்திகையும் இணைந்து வரும் சிறப்பான நன்னாளான இன்று அதாவது பிப்ரவரி 23 ஆம் தேதியன்று, அருள்மிகு முருகப் பெருமானுக்காக ஆறு தீபங்கள் மற்றும் நாம் சார்ந்த பகுதியின் நன்மைக்காக ஒரு தீபம் என நம் வீடுகளில் மொத்தம் ஏழு விளக்குகளில் தீபமேற்றி, கந்தசஷ்டி கவசத்தை நாம் பாராயணம் செய்ய வேண்டுமென உங்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்.
அதே போல வருகின்ற மார்ச் 2-ஆம் தேதி பௌர்ணமியன்று, மாலை வேளையில் திருப்பரங்குன்ற மலையில் கிரிவலம் வருவதற்கும் மக்கள் முன்வர வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கிறேன்!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
வீர தண்டாயுதபாணிக்கு அரோகரா!
சஷ்டி பாடுவோம் தீபம் ஏற்றுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications