தங்கம் + ரொக்கப்பணம்.. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உண்டியல் வசூல் எவ்வளவு? பக்தர்கள் தாராளம்
மதுரை: மாதம் தோறும் மதுரை மீனாட்சியம்மன் கோயில் உண்டியலில் பெறப்படும் காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த மாதமும் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி தொடங்கியது. பக்தர்கள் வழக்கம்போல இந்த முறையும் தாராளமாக காணிக்கையை வழங்கியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தென்னிந்திய பகுதியில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே நாகரீக மக்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அதிலும் மதுரை தொடர்பான வரலாறு குறிப்புகள் கி.மு 3ம் நூற்றாண்டிலிருந்து நமக்கு கிடைக்கப்பெற்றிருக்கின்றன. இந்த காலகட்டத்தில் கிரேக்க பயணியான மெகஸ்தான்ஸ் மதுரைக்கு வந்து சென்றிருப்பது ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது.

இதனை தொடர்ந்து ரோம் மற்றும் கிரீஸ் நாட்டை சேர்ந்த வர்த்தகர்கள் பாண்டிய மன்னர்களுடன் வர்த்தக உறவை கொண்டிருந்தனர் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. முற்கால பாண்டியர்கள், சோழர்கள், பிற்கால பாண்டியர்கள், விஜயநகர வம்சம், நாயக்க மன்னர்கள், டச்சு மற்றும் ஆங்கிலேயர்கள் என பலர் இந்த நகர ஆண்டிருக்கின்றனர். அவர்கள் ஆட்சி செய்ததற்கான பல்வேறு சான்றுகளை இந்நகரில் பார்க்க முடியும்.
மதுரை பல விஷயங்களுக்கு பிரசித்தி பெற்றிருந்தாலும், மதுரை என்றவுடன் உடனே நினைவுக்கு வருவது மீனாட்சியம்மன் கோயில்தான். இந்த கோயில் பல்வேறு காலகட்டங்களில் கட்டப்பட்டிருக்கிறது. கோயிலுக்குள் உள்ள சிற்பங்கள் நிறைந்த தூண்களைக் கொண்ட மண்டபங்களான ஆயிரங்கால் மண்டபம், கிளிக்கூண்டு மண்டபம், கொலு மண்டபம் மற்றும் புது மண்டபம் ஆகியவை பக்தர்களை பெரிதும் ஈர்க்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் இத்திருக்கோயிலில் நடைபெறும் சித்திரை திருவிழா வெகு சிறப்பாக நடத்தப்படுகிறது.
உலக பிரசித்திப் பெற்ற இக்கோயிலை காண, வெளிநாடு, வெளி மாநிலம் என தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இப்படி கோயிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையும் செலுத்துகின்றனர். இப்படி பெறப்படும் காணிக்கைகள் மாதம் ஒரு முறை எண்ணப்படுகிறது. அந்த வகையில் நேற்று கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணிகள் கோயில் அறங்காவலர்கள், இந்து சமய அறநிலையத்துறை (HR & CE) துறை அதிகாரிகள், கோயில் கண்காணிப்பாளர்கள் முன்னிலையில் தொடங்கப்பட்டன.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் மட்டுமல்லாது, அதனுடன் தொடர்புடைய 10 உப கோயில்களில் உள்ள உண்டியலிலும் காணிக்கைகள் எண்ணப்பட்டன.
அதன்படி, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் 10 உப கோவில்களில் உள்ள உண்டியல் காணிக்கை திறப்பின்போது ரொக்க பணமாக ரூ.1.31 கோடி கிடைக்கப்பெற்றதாகவும் (ரூ.1,31,16,944), தங்கம் 354 கிராம், வெள்ளி 670 கிராம் மற்றும் அயல்நாட்டு நோட்டுக்கள் 745 கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த சித்திரை மாதம் இதேபோல உண்டியல் எண்ணப்பட்டதில் ரூ.1.2 கோடி காணிக்கையாக பெறப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications