துக்ளக் இதழின் சர்க்குலேஷன் மேனேஜர் சசிகலா... குருமூர்த்தி பரபரப்பு பேச்சு
மதுரை: துக்ளக் இதழ் முன்பைக்காட்டிலும் இப்போது அதிக பிரதிகள் விற்பனையாகிறது என்றும், சசிகலா தான் அதற்கு சர்க்குலேஷன் மேனேஜர் எனவும் பேசியுள்ளார் அந்த இதழின் ஆசிரியர் குருமூர்த்தி.
மதுரையில் நடைபெற்ற துக்ளக் இதழ் வாசகர்களுடனான சந்திப்பு கூட்டத்தில் பேசிய அவர் இதனைக் கூறினார்.
மேலும், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலாவிடம் பத்திரிகை அதிபர்களும், செய்தி நிறுவனங்களின் ஆசிரியர்களும் பவ்யமாக நின்றதை பார்த்த போது தான், ஒரு புதிய முயற்சியை முன்னெடுப்போம் எனத் தனக்கு தோன்றியதாக தெரிவித்தார்.

வாசகர் சந்திப்பு
துக்ளக் இதழ் வாசகர்களுடனான சந்திப்பை வாரம் ஒரு ஊரில் நடத்தி வருகிறார் அதன் ஆசிரியர் குருமூர்த்தி. சென்னை, திருச்சியை தொடர்ந்து மதுரையில் நேற்று அந்த நிகழ்ச்சியை நடத்தினார். அதில் துக்ளக் இதழ் வாசகர்கள் திரளானோர் கலந்துகொண்டனர். சிறப்பு பேச்சாளர்களாக மூத்த பத்திரிகையாளர் மாலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

குருமூர்த்தி பெருமிதம்
பத்திரிகை துறைக்கு தன்னை அழைத்து வந்த பெருமை ராம்நாத் கோயங்காவை சேரும் என்றும், அவரிடம் இருந்து தான் எழுதுவதையே கற்றுக்கொண்டதாகவும் கூறினார். மேலும், எழுதுவதை வைத்து பணம் சம்பாதிக்க கூடாது என்ற கொள்கையை தாம் பின்பற்றுவதால், பணத்தை கண்ணில் பார்க்க முடிகிறேதே தவிர அதை செலவு செய்ய முடியாத நிலை தான் உள்ளது என நகைச்சுவை ததும்ப தெரிவித்தார்.

புதிய முயற்சி
சோ மறையும் வரை துக்ளக் இதழின் ஆசிரியராக பொறுப்பேற்பேன் என தாம் நினைத்துக் கூட பார்க்கவில்லை என்றும், பத்திரிகை அதிபர்களும், செய்தி ஆசிரியர்களும் சசிகலாவுக்கு வணக்கம் செலுத்த போயஸ் கார்டனுக்கு போய் நின்ற அவலம் தமிழகத்தில் அரங்கேறியதாகவும் கூறினார். இந்த அவல நிலையை போக்க வேண்டும் என்பதற்காகத் தான் ஒரு புதிய முயற்சியை தாம் முன்னெடுத்ததாக தெரிவித்தார்.

உரிமை
பெண்களுக்கு அளிக்கப்படும் மரியாதைக்கும், உரிமைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன என்றும், வெறுமனே பெண்களுக்கு உரிமையை கொடுப்பது பற்றி மட்டும் பேசாமல் அவர்களுக்கு உரிய மரியாதை தரப்படுவது பற்றியும் பேசவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications