திருப்புவனம் இளைஞர் மரணம்.. யார் சொல்லி தனிப்படை வழக்கை எடுத்தது? எப்ஐஆர் எங்கே? ஐகோர்ட் கிளை கேள்வி
மதுரை: இளைஞர் அஜித் குமார் மரணம் வழக்கில் காவல்துறைக்கு நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்வி எழுப்பினர். நகை திருட்டு வழக்கில் இளைஞர் ஒருவர் விசாரணை என்ற பெயரில் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
நகை திருட்டு வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாதது ஏன் எனவும், காவல் கண்காணிப்பாளரை உடனடியாக இடமாற்றம் செய்ய என்ன காரணம் என்றும், புலனாய்வு செய்வதற்கு தான் காவல்துறை? அடிப்பதற்கு எதற்கு காவல்துறை? உயர் அதிகாரிகளை காப்பாற்ற வேண்டும் என உண்மையை மறைக்க கூடாது என அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர்.

சிவகங்கை திருப்புவனத்தில் கடந்த 28 ஆம் தேதி விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட காவலாளி அஜித்குமார் காவல் நிலையத்தில் உயிரிழந்த சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. நகையை திருடியதாக குற்றம்சாட்டப்பட்ட கோவில் காவலாளி அஜித் குமார் விசாரணையின் போது அடித்து கொல்லப்பட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
தற்போது இந்த வழக்கில் பிரேத பரிசோதனை அடிப்படையில் 5 போலீசார் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நேற்று நள்ளிரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் சிவகங்கை எஸ்பி ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இதேபோன்று தமிழக அரசு இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
உயர் அதிகாரிகளை காப்பாற்றவா
அப்போது இளைஞர் அஜித் குமார் மரணம் வழக்கில் காவல்துறைக்கு நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்வி எழுப்பினர். நகை திருட்டு வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாதது ஏன்?.. யாருடைய உத்தரவினால் வழக்கு தனிப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. தனிப்படையினர் யார் சொல்லி, எதன் அடிப்படையில் இந்த வழக்கை கையில் எடுத்தனர்?.. உயர் அதிகாரிகளை காப்பாற்ற வேண்டும் என உண்மையை மறைக்க கூடாது.
அடிப்பதற்கு எதற்கு காவல்துறை?
புலனாய்வு செய்வதற்கு தான் காவல்துறை? அடிப்பதற்கு எதற்கு காவல்துறை?.. காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் முறையாக வேலை செய்கிறதா?.. கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத்தை உடனே இடமாற்றம் செய்ய என்ன காரணம்?, வழக்கை எதிர்கொள்ள வேண்டியது தானே? ஏன் அப்படி செய்யவில்லை.. காவல்துறை, நீதித்துறை குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இப்படி நடந்திருந்தால் என்ன செய்து இருப்பீர்கள்..
தமிழகத்தில் இப்படி நடப்பது..
அதிக கல்வியறிவு கொண்ட மாநிலமான தமிழகத்தில் இப்படி நடப்பது ஏற்கத் தக்கது அல்ல. நீதித்துறை நடுவர் உடனே விசாரணையை தொடங்க வேண்டும் என உத்தரவிட நேரிடும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
நீர்த்துப்போகச் செய்யும் வகையில் செயல்பட்டால்
தொடர்ந்து இன்று மாலை 3 மணிக்கு பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் மாஜிஸ்திரேட் அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் காவல்துறையினர் இளைஞர் அஜித் குமாரை தாக்கும் வீடியோவை தாக்கல் செய்த சக்தீஸ்வரன் என்பவரையும் இன்று மாலை நேரில் ஆஜராக உத்தரவிட்டனர். மேலும் வழக்கை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் தமிழக அரசு செயல்பட்டால் கடும் உத்தரவு பிறப்பிக்க நேரிடும். சட்டவிரோத காவல் மரணங்களை நீதிமன்றம் கடுமையாக பார்க்கிறது என்று கூறி வழக்கை இன்று மாலை 3 மணிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications