மதுரை எய்ம்ஸ் செங்கல் கூட இல்லை.. 95% பணி முடிந்ததா? ஜேபி நட்டாவின் பச்சை பொய்- எம்.பிக்கள் காட்டம்
மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்டுமானப் பணிகள் 95% முடிவடைந்துவிட்டதாக பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா கூறியிருப்பதற்கு தமிழக எம்.பி.க்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழக பாஜக நிகழ்ச்சியில் பங்கேற்க பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா நேற்று மதுரை வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜேபி நட்டா, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கு ரூ1,264 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு விரைவில் அர்ப்பணிக்க உள்ளார் என்றார்.
ஜேபி நட்டாவின் இந்தப் பேட்டி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்ட செங்கல் கூட இப்போது அங்கு இல்லை. சுற்றுச் சுவர் வேலியுடன் கட்டப்பட்டுள்ளது மட்டுமே மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி எனலாம்.
இந்நிலையில் தமிழக எம்.பி.க்களான சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் ஆகியோர் இன்று செய்தியாளர்களை அழைத்துக் கொண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இட உள்ளத்தில் என்னதான் கட்டுமானப் பணிகள் நடந்துள்ளன என சுட்டிக்காட்டினர். அப்போது ஜேபி நட்டாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பதாகைகளை அந்த பொட்டல் பூமியில் இருவரும் ஏந்தி நின்றனர். பின்னர் சிபிஎம் கட்சி நிர்வாகிகள் அங்கு முழக்கமிட்டனர்.
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளின் உண்மை நிலவரம் தொடர்பாக சு.வெங்கடேசன் எம்.பி. கூறியதாவது: மத்திய அரசின் அதிகாரிகள் கடந்த வாரம் கூட, இன்னமும் ஆரம்ப வேலையே நடைபெறவில்லை என தெரிவித்தனர். ஒருவாரத்துக்கு முன்னர் கூட நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பார்த்தபோதுகூட ஒருவேலையும் நடைபெறவில்லை. ஆனால் இடைப்பட்ட 4 நாட்களில் 95% பணிகளை கட்டி முடித்துவிட்டதாக ஆளுகிற கட்சியின் அகில இந்தியத் தலைவர் அறிவித்தது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது.
ஒருவேளை புல் புல் பறவைகள் மூலம் இத்திட்டத்தை இரவோடு இரவாக கட்டி முடித்துவிட்டார்களோ என்ற சந்தேகம் வந்தது. ஏனெனில் புல்புல் பறவைகள் மூலமாக அத்தனையையும் செய்து முடிக்கிறார்கள். ஆகையால்தான் இந்த இடத்தை நேரடியாக பார்வையிட்டோம். இங்கே இருந்த பெயர்ப் பலகையைக் கூட காணவில்லை. ஏற்கனவே இங்கே இருந்த செங்கல்லைக் கூட காணவில்லை என விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் கூறினார்.
மத்திய அமைச்சரவை நிதி ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் தரவில்லை. இதனால் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளுக்கு ஒப்பந்த புள்ளிகளும் கோரப்படவில்லை என்பதுதான் உண்மையான நிலை. ஜேபி நட்டா சொல்லி இருப்பது அப்பட்டமான பொய் என்பதை மக்கள் அறிவார்கள். இவ்வாறு சு.வெங்கடேசன் கூறினார்.