4 மணி நேரத்தில் நிரம்பிய நீட் தேர்வு மையங்கள் தமிழ் தேர்வர்கள் திணறல் - சு. வெங்கடேசன் எம்.பி கடிதம்
மதுரை: தமிழகத்தில் நீட் முதுநிலைப் பட்ட தேர்வு மையங்களின் எண்ணிக்கை போதாததால், உடனடியாக தேர்வு மையங்களை தமிழகம், புதுச்சேரியில் அதிகரிக்க வேண்டுமென்று எம்.பி சு.வெங்கடேசன் மத்திய சுகாதார அமைச்சருக்கும், தேசிய தேர்வுக் கழகத்திற்கும் கடிதங்களை அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து சு. வெங்கடேசன் எம்.பி தனது கடிதத்தில், "இரண்டு நாட்களாக தமிழகத்தை சேர்ந்த நிறைய நீட் முதுநிலைப் பட்ட தேர்வர்கள் என்னை தொடர்பு கொண்டு தமிழ்நாடு, புதுச்சேரி மையங்கள் கிடைக்கவில்லை என்று தெரிவித்து வருகிறார்கள்.
ஆன்லைன் விண்ணப்பங்களுக்கான நேரம் துவங்கி 4 மணி நேரத்திற்குள்ளாக தமிழ் நாட்டு மையங்கள் நிரம்பிவிட்டதாக தெரிகிறது. ஆகவே தேர்வர்கள் தமிழ்நாட்டு மையத்தை தெரிவு செய்ய முடியவில்லை. அதற்குப் பிறகு புதுச்சேரி, கேரளா மையங்களும் நிரம்பி விட்டதாக எனக்கு தெரிவிக்கப்பட்டது. ஆகவே அந்த வாசல்களும் அடைபட்டுவிட்டன.
இது தேர்வர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. அவர்கள் மனதில் பதட்டத்தையும், பாதிப்பையும் உருவாக்கியுள்ளது. கோவிட் காலமாகையால் வேறு மாநிலங்களுக்கு பயணம் செய்வதும், அங்கு போய் தங்குவதும் மிகக் கடினமாக இருக்கும். பெண் தேர்வர்கள், அவர்களோடு துணையாகச் செல்லும் மூத்தவர்கள் ஆகியோர் கூடுதல் சிரமங்களை எதிர் கொள்வார்கள்.
ஆகவே தேர்வர்களின் நியாயமான உணர்வுகளைக் கணக்கிற் கொண்டு தமிழ்நாடு, புதுச்சேரியில் கூடுதல் மையங்களை உடனடியாக ஏற்பாடு செய்ய நல்ல முடிவை எடுக்க வேண்டுகிறேன்." என்று கோரிக்கை விடுத்துள்ளார்.