கேலி பேசியவர்கள் முகத்தில் கரிபூசி.. ஜல்லிக்கட்டுக்கு தில்லாக காளை வளர்க்கும் திருநங்கை கீர்த்தனா!
மதுரை: பொங்கல் விழாவின்போது ஜல்லிக்கட்டில் பங்கேற்க காளை மாடுகளை வளர்த்துவருகிறார் மதுரையைச் சேர்ந்த திருநங்கை ஒருவர்.
Recommended Video
வீரம் விளையும் மதுரையில் பொங்கல் விழாக்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். தொன்றுதொட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கிறது. இந்த போட்டிகளில் காளைகள் சீறீப்பாய்ந்து வரும். அதை ஜல்லிக்கட்டு வீரர்கள் அடக்கி தங்கள் வீரத்தைக் காட்டுவார்கள்.
அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் என மதுரை சுற்றுவட்டாரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு உலக பிரசித்தம். இந்தப் போட்டிகளைக் காண உலகெங்கிலும் இருந்து மக்கள் மதுரைக்கு வருவார்கள். ஆயிரக்கணக்கான வீரர்கள் இதில் பங்கெடுப்பார்கள். ஜல்லிக்கட்டுக்காகவே பிரத்யேகமாக மாடுகள் வளர்க்கப்பட்டன.

மெரினா போராட்டம்
ஜல்லிக்கட்டு நடத்த பீட்டா அமைப்பு தடை வாங்கியபோது, சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இரவு பகல் பாராமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப்போராட்டம் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது. இதன்பிறகு தடைநீக்கப்பட்டு, விமரிசையாக ஜல்லிக்கட்டு நடந்தது. இந்தப்போராட்டம் தமிழ் மக்கள் நெஞ்சில் நீங்கா இடம்பிடிக்கும். போராட்டத்துக்கு பிறகு நடந்த ஜல்லிக்கட்டைப் பார்க்க தமிழகமெங்கும் இருந்து ஜல்லிக்கட்டுப் போட்டி நடக்கும் இடத்துக்குக் குவிந்தனர்.

திருநங்கை
ஜல்லிக்கட்டில் மாடு சிறப்பு வாய்ந்தது. மாடுகளை சாமியாக பார்க்கும் பழக்கம் இன்றளவும் தமிழகத்தில் இருந்து வருகிறது. அதனால் ஜல்லிக்கட்டு மாடுகளை அதி சிரத்தை எடுத்துப் கவனிப்பார்கள். இந்நிலையில், திருநங்கை ஒருவர் மதுரையில் ஜல்லிக்கட்டு மாடு வளர்த்து வருகிறார். திருநங்கை கீர்த்தனா, மதுரை திருப்பரங்குன்றத்தில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் முதல் முறையாக தான் வளர்த்த மாட்டை வாடிவாசல் தாண்டி அனுப்பிவைத்தார். முதல் போட்டியிலேயே அந்த மாடு வெற்றி பெற்றது. இதையடுத்து தமிழகமே திருநங்கை கீர்த்தனாவை திரும்பிப்பார்த்தது.

பரிசு
சின்னக்கட்டளையில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருநங்கை கீர்த்தனா பயிற்சி கொடுத்த "பெரிய மருது" என்ற காளை சிறந்த காளைக்கான விருதை வென்றது குறிப்பிடத்தக்கது. தற்போது கீர்த்தனா ஆறு காளை மாடுகளை கீர்த்தனா வளர்த்துவருகிறார். அதோடு இரண்டு கன்றுகளையும் வளர்க்கிறார். ''எங்கள் வீட்டில் எல்லோரும் மாடு வளர்த்தார்கள். அதனால் சின்ன வயதில் இருந்தே மாடுகள் மீது எனக்கு பிரியம். திருநங்கையாக மாறிய பிறகு வீட்டைவிட்டு வந்தேன். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்துகொண்டபோது மாடு வளர்க்க வேண்டும் என்று ஆசை வந்தது. போராட்டங்களுக்குப் பிறகு வீட்டுக்கு வந்தேன். நண்பன் உதவியோடு மாடு வாங்கினேன்.

பயிற்சி
காளைகளுக்கு தினமும் நடைப்பயிற்சி, மண்குத்தல், நீச்சல் போன்ற பயிற்சிகளை வழங்கி வருகிறேன். இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆறு காளை மாடுகளை தயார்படுத்தி வருகிறேன். நிச்சயம் இந்தமுறை சிறப்பாக என் மாடுகள் செயல்படும். பெரிய முத்தையா, சின்ன முத்தையா, கருடன், நரசிம்மன், ருத்ரன் என மாடுகளுக்கு பெயர் வைத்து வளர்த்து வருகிறர். இந்த மாடுகள் ஜல்லிக்கட்டில் ஜெயித்து எனக்கு பைக், கட்டில், பீரோ, அண்டா என ஏகப்பட்ட பரிசுகளை வாங்கித் தந்திருக்கிறது'' என்கிறார் திருநங்கை கீர்த்தனா.

முன்மாதிரி
கீர்த்தனா ஜல்லிக்கட்டு மாடுகளை வளர்க்கத்துவங்கியதும், பலரும் அவரை கேலி பேசியிருக்கிறார்கள். முதல் வெற்றிக்குப் பிறகு அவரை எல்லோரும் அங்கீகரித்தார்கள். இந்நிலையில், ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பு குறித்து இரண்டு திருநங்கைகளுக்கு பயிற்சி கொடுக்கிறார். திருநங்கைகள் அலங்காநல்லூர் சிந்தாமணி, மணப்பாறை விஜி என தற்போது பலரும் ஜல்லிக்கட்டு மாடு வளர்க்கிறார்கள்.












Click it and Unblock the Notifications