அவங்க கட்சிக்காரங்களே பேனர கிழிச்சிட்டு எங்களை சொல்றாங்க... ஐஜியிடம் தங்க தமிழ்ச்செல்வன் புகார்!
மதுரை : பசும்பொன்னில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அதிமுகவினரே கிழித்து விட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மீது குற்றம்சாட்டுவதாக
தென்மண்டல ஐஜியிடம் புகார் செய்யப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
பொதுஇடங்களில் பேனர்களை வைக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் பசும்பொன்னில் பேனர் வைக்கப்பட்டதோடு அந்த பேனரை யார் கிழித்தது என்ற போட்டா போட்டி அதிமுக, அமமுக இடையே நடந்து வருகிறது.
கடந்த 30ம் தேதி பசும்பொன்னில் முத்துராமலிங்கருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சென்றிருந்தனர். இவர்களை வரவேற்று, வாழ்த்தி அதிமுக நிர்வாகிகள், ஏராளமான பிளக்ஸ் பேனர்கள் மற்றும் பதாகைகளை வைத்திருந்தனர்.

அமமுகவினர் மீது வழக்கு
இவர்கள் வந்து சென்ற பின்னர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அங்கு அஞ்சலி செலுத்த வந்திருந்தார். அப்போது அமமுகவினர் ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு வைத்திருந்த பதாகைகளை கிழித்து சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டப்படுகிறது. பேனர் கிழிக்கப்பட்டது தொடர்பாக டிடிவி தினகரன் மற்றும் அவரது கட்சியினர் மீது கமுதி காவல் நிலையத்தில் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் டிடிவி தினகரன் உள்ளிட்ட 100 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதோடு 6 பேர் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.

பொய் புகார் மீது நடவடிக்கை தேவை
இந்நிலையில் அதிமுக திட்டமிட்டே பொய்புகார்களை பரப்பி வருவதாக டிடிவி தினகரன் தரப்பினர்கூறியுள்ளனர். அதிமுக சார்பில் வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பதாகைகளை சேதப்படுத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்குபதிவு தொடர்பாக, அமமுக கொள்கைபரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் மதுரை தென்மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அதிமுக தொண்டர்களே சேதப்படுத்தினார்கள்
இதன்பின்னர் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்ச்செல்வன் கூறியதாவது,
பசும்பொன்னில் அதிமுகவினர் திட்டமிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மீது குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தென்மண்டல ஐஜி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிமுகவினர் தான் அதிமுக கொடிகளை கையில் பிடித்துக் கொண்டு தலையில் மஞ்சள் துணியை கட்டிக்கொண்டு அனைத்து பேனர்களையும் கிழித்தனர். அவர்கள் பேனர் கிழித்ததை நாங்களே நேரில் பார்த்தோம் அப்படி இருக்க இந்த விவகாரத்தை எங்கள் மீதே திருப்பலாமா.

இடைத்தேர்தல் வராது
திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் மட்டுமே தற்போது இடைத்தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது. 18 சட்டமன்ற தொகுதிக்கு தற்போது தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை,
அல்லது 20 தொகுதிகளுக்கும் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்துதான் தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications