உசிலம்பட்டியில் களமிறங்கும் டிடிவி தினகரன்? அதிர்ச்சியில் ஆர்பி உதயகுமார்.. சோகத்தில் அதிமுக!
மதுரை: சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. ஏற்கனவே கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை தீவிரமாக நடந்து வரும் சூழலில், அமமுக என்ன முடிவு எடுக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜனவரி 5ஆம் தேதி அமமுக பொதுக்குழு கூட்டம் நடக்கவுள்ளது. அதன்பின் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று பார்க்கப்படுகிறது.
அமித்ஷாவின் முடிவுக்காக காத்திருக்கும் டிடிவி தினகரன், தங்களுக்கு சாதகமான தொகுதிகளை அடையாளம் காணும் பணிகளில் ஈடுபட தொடங்கி இருக்கிறார். கடந்த முறை கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்டு சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் டிடிவி தினகரன் தோல்வி அடைந்தார். இருந்தாலும் இம்முறையும் தென் மாவட்டங்களிலேயே போட்டியிட டிடிவி தினகரன் முடிவு எடுத்திருக்கிறார்.

இந்த நிலையில் உசிலம்பட்டி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட வாய்ப்புகள் உள்ளதாக சில பேச்சுகள் எழுந்துள்ளது. கடந்த தேர்தலில் திமுக சார்பாக ஃபார்வர்டு பிளாக் கட்சிக்கு உசிலம்பட்டி தொகுதி ஒதுக்கப்பட்டது. வழக்கமாக எந்தக் கூட்டணியில் இடம்பெற்றாலும் ஃபார்வர்டு பிளாக் கட்சி எப்படியாவது உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிடும்.
சமூக வாக்குகளை எளிதாக அறுவடை செய்ய முடியும் என்பதால், இதனை வழக்கமாக வைத்துள்ளது. கடந்த முறை திமுகவினரின் ஒத்துழைப்பு இல்லாததால், உசிலம்பட்டி தொகுதியில் தோல்வி அடைந்தது. இதையடுத்து திமுக கூட்டணியில் இருந்து விலகிய ஃபார்வர்டு பிளாக் கட்சி, அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. தற்போது உசிலம்பட்டி எம்எல்ஏ-வாக உள்ள ஐயப்பம் ஓபிஎஸ் ஆதரவாளராக இருக்கிறார்.
இதனால் முன்னதாக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார், கடந்த முறை உசிலம்பட்டி தொகுதியில் அமமுக சார்பாக போட்டியிட்ட மகேந்திரனை அதிமுகவில் இணைத்து தயார் செய்து வருகிறார். எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமாக இருக்கும் ஆர்பி உதயகுமார், நிச்சயம் உசிலம்பட்டி தொகுதியை பெற்றுக் கொடுப்பார் என்று மகேந்திரன் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.
ஆனால் ஐயப்பனுக்கு பின் அடுத்த வரிசையில் இருந்த நிர்வாகிகள் பலரும் ஆர்பி உதயகுமார் முடிவுக்கு முட்டுக்கட்டையாக உள்ளனர். இதனால் அதிமுகவிலேயே முனுமுனுப்பு எழுந்துள்ளது. இப்படியான சூழலில் டிடிவி தினகரன் பார்வை உசிலம்பட்டி தொகுதி பக்கம் திரும்பி இருக்கிறது. இதனால் ஃபார்வர்டு பிளாக் கட்சிக்கு உசிலம்பட்டி தொகுதியை கொடுக்க அதிமுக முடிவு எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஒருவேளை ஃபார்வர்டு பிளாக் கட்சி தயக்கம் காட்டினால், மகேந்திரனை மீண்டும் தேர்தல் களத்தில் இறக்க அதிமுக தலைமை தயாராகி வருகிறது. இதனால் டிடிவி தினகரன் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதே கேள்வியாக உள்ளது. என்டிஏ கூட்டணியில் டிடிவி தினகரன் இணைந்தால், கடைசி நேரத்தில் அவரின் தொகுதி மாறக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications