மோடியும், அமித்ஷாவும் பெரிய மனுசங்க.. டெல்லியில் என்ன நடந்துச்சு தெரியுமா.. தினகரன் பரபரப்பு தகவல்
மதுரை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் (ஏப்ரல் 23) நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு 2 நாட்களே உள்ளது. இன்றுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது. அரசியல் கட்சியினர் இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுகவும் போராடி வருகிறார்கள். தவெக, நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் வேகம் காட்டுகிறார்கள். மோடியும், அமித்ஷாவும் பெரிய மனிதர்களாக இருந்து தங்களை இணைத்துள்ளதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் ஆர்.பி உதயக்குமாரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது தினகரன் பேசுகையில், "உண்மையில் தமிழகத்திற்கு நிறைய திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு நினைக்கிறது. நாங்கள் எல்லாம் டெல்லிக்கு சென்று வந்தால் எங்களை அடிமைகள் என்று சொல்கிறார்கள். அதிமுகவை பாஜக அழித்துவிடும், அமமுகவை அழித்துவிடும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சொல்கிறார்.

பங்காளி சண்டை
அவர்கள் அழிக்க நினைத்தால் எதற்கு அதிமுக அமமுகவை ஒன்றிணைக்க வேண்டும். ஊரில் அண்ணன் தம்பி சண்டை, பங்காளி சண்டை இருப்பது இயல்பு தான். அதை எல்லாம் அந்த ஊரில் உள்ள பெரிய மனிதர்கள் தானே சமாதானம் செய்து வைப்பார்கள். அவர்கள் தான் சண்டையை சரிசெய்து சேர்த்து வைப்பார்கள். இல்லையென்றால் நானும், உதயக்குமாரும் சேர்ந்திருக்க முடியுமா சொல்லுங்கள்.
எங்களுக்குள் எப்போதும் பரஸ்பர அன்பு இருக்கும். அரசியல் என்று வந்துவிட்டால் கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். அப்போது ஊரில் உள்ள பெரிய மனுசங்க தான் கூப்பிட்டு எல்லாரும் ஒன்றாக இருங்கள் என்று சொல்லுவார்கள். அப்படித்தான் டெல்லியில் உள்ள பெரிய மனிதர்கள் எங்களை அழைத்து சமாதானப்படுத்தினார்கள்.
பெரிய மனிதர்கள் சமாதானம்
இப்போது மட்டுமில்லை, 2021 தேர்தலின்போதே அமித்ஷா என்னை டெல்லி அழைத்து, நீங்கள் எல்லாம் ஓரணியில் வரவேண்டும். அப்போதுதான் மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைக்க முடியும் என கூறினார். அப்போது அது நடக்கவில்லை. அவர் தொடர்ந்து செய்த முயற்சியால் இன்றைக்கு நாங்கள் ஒன்றாகியுள்ளோம். அதற்கு மோடி அவர்களுக்கும், அமித்ஷா அவர்களுக்கும் கடமைப்பட்டுள்ளோம்" என்றார்.












Click it and Unblock the Notifications