அமைச்சருக்கு ஒரு நியாயமா? திருப்பரங்குன்றத்தில் நிர்மல்குமார் கால் வைத்ததும் பஞ்சாயத்து!
மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தவெக அமைச்சர் நிர்மல்குமார் நேற்றைய தினம் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்காக மதியம் கோயில் நடை அடைப்பு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டதால் பக்தர்கள் அதிருப்தியடைந்தனர்.
சென்னையில் பதவியேற்பு விழா, சட்டசபை சபாநாயகர் தேர்தல், நம்பிக்கை வாக்கெடுப்பு உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்த நிலையில் சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டதால் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர்.

அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்திற்கு சென்ற அமைச்சர் கீர்த்தனாவுக்கு ஆட்சியர், எஸ்பி உள்ளிட்டோர் வரவேற்றனர். அது போல் கோபிசெட்டிபாளையம் சென்ற அமைச்சர் செங்கோட்டையனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அது போல் தவெக எம்எல்ஏ ரமேஷ் ஸ்ரீரங்கம் சென்று அங்குள்ள அரசு மருத்துவமனைகளை ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் அமைச்சர் நிர்மல்குமாரும் திருப்பரங்குன்றம் சென்றார். அங்கு அவர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.
இதையடுத்து அவர் நேற்று மதியம் 12.55 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய வந்தார். கோயில் முன்பு தவெகவினர் திரண்டு அவரை வரவேற்றனர். கோயிலுக்கு சென்ற நிர்மல்குமாருக்கு பூரண கும்ப மரியாதை கொடுக்கப்பட்டது.
அமைச்சர், அவரது ஆதரவாளர்கள் என நிறைய பேர் மூலஸ்தானத்திற்கு சென்று தரிசனம் செய்துவிட்டு திரும்பினர். கோயிலில் வழக்கமாக மதியம் 12.30 மணிக்கு உச்சி கால பூஜை தொடங்கும். இதையடுத்து 12.45 மணிக்கு கோயில் ராஜகோபுரத்தின் கீழ் உள்ள மண்டபத்தில் பெரிய கதவுகள் அடைக்கப்படும்.
பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். விழா காலங்களில் மட்டும் மதியம் நடை சாத்தப்படாமல் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். பக்தர்கள் கூட்டம் அதிகம் உள்ள நாட்களிலும் திருமண நாட்களிலும் வழக்கம் போல் மதியம் 12.45 மணிக்கு கோயிலுக்குள் யாரையும் அனுமதிக்க மாட்டார்கள்.
கோயிலுக்குள் சென்ற பக்தர்கள் தரிசனம் முடித்துக் கொண்டு வெளியேறிய பிறகு நடை சாத்தப்படும். அமைச்சர் நிர்மல் குமார் நேற்றைய தினம் 1 மணிக்கு கோயிலுக்குள் சென்றார். மதியம் 1.06 மணிக்கு மூலஸ்தானத்தில் ஆதரவாளர்களுடன் தரிசனம் முடித்து மதியம் 1.15 மணிக்கு வெளியே வந்தார். அதன் பிறகுதான் நடை சாத்தப்பட்டது.
வழக்கமாக பக்தர்கள் மூலஸ்தானத்தில் தரிசனம் முடித்து மடப்பள்ளி மண்டபம், சஷ்டி மண்டபம் வழியாக வெளியில் அனுப்பப்படுவர். அமைச்சருக்காக பெரிய நிலை கதவு திறக்கப்பட்டு முன்பக்க வாசல் வழியாக வெளியே அனுப்பப்பட்டார். இதன் வீடியோ வைரலான நிலையில் பக்தர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். திருக்கார்த்திகை தீபத்தன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications