TVK Maanadu Madurai: மதுரை குலுங்க குலுங்க.. விஜய்யின் தவெக மாநாடு தொடங்கியது.. லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர்
மதுரை: மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு முன்கூட்டியே தொடங்கியது. 3 லட்சத்துக்கும் அதிகமான தொண்டர்கள் குவிந்ததால், முன்கூட்டியே கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. இந்த மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பிரமாண்டமாக தவெக நிர்வாகிகள் செய்து இருந்தனர். விஜய் இந்த மாநாட்டில் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு தவெகவினர் மத்தியில் மட்டும் இன்றி அரசியல் கட்சியினர் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரை பாரபத்தியில் தொடங்கியது. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி இரவு 7.30 மணிக்குள் மாநாட்டை முடிக்க தவெகவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் 3 லட்சத்துக்கும் அதிகமான தொண்டர்கள் குவிந்ததால் மாநாட்டை முன்கூட்டியே 3 மணிக்கு தொடங்கினர். தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் மாநாடு தொடங்கி நடந்து வருகிறது. பிற்பகல் 3 மணியளவில் விஜய்யின் தந்தை சந்திரசேகர் - தாய் ஷோபாவும் வருகை தந்தனர். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் நேற்று மாலையே மதுரை வந்தார்.

விஜய் மதுரை மாநாடு
சென்னையில் இருந்து காரில் மதுரைக்கு வந்த விஜய், சிந்தாமணி அருகே உள்ள நட்சத்திர விடுதியில் தங்கினார். மாநாடு ஏற்பாடுகள் அனைத்தும் பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது. பாரபத்தி பகுதியில் 506 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. மாநாடு மேடையின் உச்சியில் "வாகை சூடும் வரலாறு திரும்புகிறது" என்று குறிப்பிட்டு அண்ணா, எம்.ஜி.ஆர்., விஜய் படங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
மாநாடு தொடங்கியதும் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் கொடியை ஏற்ற விஜய் திட்டமிட்டு இருந்தார். ஆனால், நேற்று கொடிக்கம்பம் நிறுவும் போது கிரேனில் கட்டப்பட்டு இருந்த பெல்ட் அறுந்து விழுந்தததால், கொடிக்கம்பம் விழுந்து நொறுங்கியது. இதனால், 100 அடி கொடிக்கம்பம் அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. மாநாட்டில் சுமார் 2 லட்சம் தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் இருக்கைகள் போடப்பட்டு இருந்தன. ஆனால் 3 லட்சத்துக்கும் அதிகமான தொண்டர்கள் குவிந்ததாக கூறப்படுகிறது.
விஜய் என்ன பேசுவார்?
தொண்டர்களை நடந்து சென்று விஜய் பார்க்கும் வகையில், 300 மீட்டர் தூரத்திற்கு 'ரேம்ப் வாக்' நடைமேடை அமைக்கப்பட்டு இருக்கிறது. மாநாடு நடைபெறும் முழுவதும் போகஸ் லைட் பொறுத்தப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது. மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. நிறைவாக கட்சி தலைவர் விஜய் சிறப்புரை ஆற்றுகிறார். சிறப்புரையில் முக்கிய அறிவிப்பை விஜய் வெளியிடுகிறார்.
விஜய் பேச்சுடன் விழா நிறைவு பெறுகிறது. தன் மீதான விமர்சனங்கள் உள்ளிட்டவற்றிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விஜய் பேச்சு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டுக்கான பந்தல் அமைப்பு பணி உள்பட அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் நேற்றில் இருந்தே மதுரையில் குவிந்துள்ளனர். இந்திய அளவில் எந்த ஒரு அரசியல் கட்சி மாநாடும் இதுவரை நடந்திராத வகையில் நாடே திரும்பி பார்க்கும் மாநாடாக இந்த மாநாடு இருக்கும் என்று தவெகவினர் தெரிவித்து வருகிறார்கள்.
குடிநீர், உணவு வசதி
வாகனம் பார்க்கிங் இடங்கள், குடிநீர் வசதி, மருத்துவ குழு, சுகாதார வசதிகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளது. தொண்டர்கள் அமர்வதற்கு 60 பாக்ஸ்கள் அமைக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு பாக்ஸ்களிலும் சுமார் 2,500 பேர் அமரும் வசதி உருவாக்கப்பட்டு இருந்தது.
குடிநீர் பற்றாக்குறை ஏற்படாத வண்ணம் பூமிக்கடியில் குழாய்கள் பதிக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க ராட்சத குடிநீர் தொட்டிகள் மாநாடு பந்தலை சுற்றிலும் அமைக்கப்பட்டு இருந்தது. இதேபோன்று மாநாட்டுக்கு வரும் வழி நெடுகிலும் ஆங்காங்கே உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.
பாதுகாப்பு பணி
தொண்டர்கள் அனைவருக்கும் தண்ணீர் பாட்டில், ஜூஸ், பிஸ்கட் வழங்கப்பட்டது. மாநாட்டில் பங்கேற்க நேற்றிலிருந்தே தொண்டர்கள் குவிந்து வந்தனர். நேற்று நள்ளிரவே அங்கு தங்கினர். நிகழ்ச்சி தொடங்கி பிறகும் கூட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்து வருகிறார்கள். மாநாட்டில் பாதுகாப்பு பணிக்காக சுமார் 3 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தவெக சார்பில் 2 ஆயிரம் தனியார் பாதுகாவலர்களும் நியமிக்கப்பட்டனர். 300 பெண் பவுன்சர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.












Click it and Unblock the Notifications