மக்களிடையே பக்தி குறைந்ததால் தான் இப்படி பருவம் தவறி மழை பெய்யுது.. மதுரை ஆதீனம் கருத்து!
மதுரை: "தமிழகத்தில் பெய்து வரும் பருவம் தவறிய மழைக்கு காரணம் மக்களிடையே பக்தி குறைவாக இருப்பது தான் " எனத் தெரிவித்துள்ளார் மதுரை ஆதீனம். வடகிழக்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்கியது பற்றிய கேள்விக்கு மதுரை ஆதீனம் இவ்வாறு கூறியுள்ளார்.
மதுரை 293-வது ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் இன்று வீரபாண்டிய கட்டபொம்மனின் 225 -வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய மதுரை ஆதீனம், "இன்றைய தலைமுறையினர் சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்த வேண்டும். வெள்ளையர்களை எதிர்த்து போராடிய வீரபாண்டிய கட்டபொம்மன் வரி கட்ட மறுத்த வீரன்.
தொடர்ந்து அரசு இளைஞர்களுக்கு விடுதலைப் போராட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். ஆண்டுதோறும் மதுரை ஆதீனம் சார்பாக விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு உரிய மரியாதை செலுத்தி வருகிறேன். அவர்கள் இல்லை என்றால் நாம் இன்று இல்லை." என்றார்.
அதைத்தொடர்ந்து, தமிழகத்தில் பருவம் தவறிய மழை பொழிய காரணம் என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த மதுரை ஆதீனம், "தமிழகத்தில் இன்றைக்கு பருவம் தவறிய மழைக்கு காரணம் மக்களிடையே பக்தி குறைவாக இருப்பது தான். கோயில் நிலங்களில் குத்தகைதாரர்கள் குத்தகை தொகையை முறையாக செலுத்துவதில்லை. அதனை சரிவர செலுத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்.
மேலும், நடிகர் விஜய் அரசியல் கட்சி குறித்து செய்தியாளர்கள் கேட்டதும், "எதிலாவது என்னை மாட்டி விடணும்.. பாத்தீங்களா?" எனக் கூறியபடியே உடனே அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றார் மதுரை ஆதீனம்.












Click it and Unblock the Notifications