கிடுகிடுவென உயர்ந்த வைகை அணையின் நீர் மட்டம்! 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
மதுரை: இடுக்கி, தேனி உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக நிரம்பியுள்ளது. எனவே 5 மாவட்ட மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில், வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இன்று காலை வரை அணைக்கு நீர்வரத்து 12,500 கன அடியாக இருந்தது. ஆனால் இன்று மதியம் திடீரென நீர்வரத்து 20,000 கனஅடியாக அதிகரித்தது. இந்த அணை 111 அடி உயரம் கொண்டது. இருப்பினும் 71 அடி வரை மட்டுமே நீரை தேக்கி வைக்க முடியும். தற்போது நீர்மட்டம் 66 அடியை எட்டியிருக்கிறது. எனவே முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல அணையின் நீர்மட்டம் 68.5 அடியாக எட்டியதும் இரண்டாம் கட்ட எச்சரிக்கை கொடுக்கப்படும். 69 அடியை எட்டும் போது 3ம் கட்ட எச்சரிக்கையும், 71 அடியை எட்டும் போது உபரி நீர் முழுவதும் திறந்து விடப்படும்.
ஏற்கெனவே முல்லை பெரியார் அணையிலிருந்து அதிக அளவு நீர் வெளியேற்றப்படுவதாலும், தேனியின் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாகவும் தேனியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்திருக்கிறது. இந்நிலையில், வைகை கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. வைகை அணையை பொறுத்தவரை நாளை காலைக்குள் அணை முழு கொள்ளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications