சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு.. 2 மாதங்களில் தீர்ப்பு.. மதுரை உயர் நீதிமன்ற கிளை அதிரடி
மதுரை: தூத்துக்குடி சாத்தான்குளம் தந்தை மகன் இரட்டை கொலை வழக்கில் சிறையில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ், தனக்கு ஜாமீன் கேட்டு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில் நேற்று தீர்ப்பளித்த மதுரை உயர் நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், இரட்டைக்கொலை வழக்கின் விசாரணையை 2 மாதத்தில் கீழமை நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ். இவருடைய மகன் பென்னிக்ஸ். சாத்தான்குளம் பஜார் பகுதியில் இவர்கள் இருவரும் செல்போன் கடை நடத்தி வந்தனர். கொரோனா காலத்தில் அதாவது கடந்த 2020 ஜுன் மாதம் போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர். அப்போது காவல் நிலையத்தில் போலீசார் அடித்ததில் தந்தை மகன் இருவரும் பலியாகினர்.

சட்டவிரோத காவலில் தாக்கப்பட்ட தந்தை, மகன் இறந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கின் விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்எஸ்ஐக்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், காவலர்கள் என 9 பேரை சிபிஐ போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
கிட்டதட்ட 4 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் பல்வேறு முறை தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தான், இரட்டை கொலை வழக்கில் சிறையில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ், தனக்கு ஜாமீன் கேட்டு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். ஆனால், ரகுகனேஷ்க்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்து உயிரிழந்த ஜெயராஜ்ஜின் மனைவி செல்வராணி இடையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுக்கள் நீதிபதி முரளி சங்கர் மீது முன்பே விசாரணைக்கு வந்தது. அப்போது ரகு கணேஷ்க்கு ஜாமீன் வழங்க சிபிஐ மற்றும் செல்வராணி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் நேற்று மதுரை உயர் நீதிமன்ற கிளை தீர்ப்பளித்தது. இதில் மனுதாரர் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் இரட்டைக்கொலை வழக்கின் விசாரணையை 2 மாதத்தில் கீழமை நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications