விஜய்யால் எந்த கட்சிக்கு அதிக பாதிப்பு வரும்? மதுரை எம்பி சு.வெங்கடேசன் கொடுத்த பதில்!
மதுரை: தவெக தலைவர் விஜய்யால் எந்தக் கட்சிக்கு பாதிப்பு என்ற கேள்விக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் பதில் அளித்துள்ளார். விஜய்யால் யாருக்கு பாதிப்பு என்பதை மே 4ஆம் தேதிக்கு பின் ஆய்வு செய்வோம் என்று கூறிய சு.வெங்கடேசன், 4 அணிகள் போட்டியிடும் போது அதன் முடிவு ஆளுங்கட்சிக்கு சாதகமாக அமையும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த சூழலில், எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அரசியல் கட்சியினர் தொடர் பிரச்சாரத்திற்கு பின் ஓய்வு எடுத்து வருகின்றனர். இதனால் ஏப்ரல் 29ஆம் தேதி எக்ஸிட் போல் முடிவுகளுக்கு பின் மீண்டும் அரசியல் களம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து எம்பி சு.வெங்கடேசன் பேசுகையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கும், தொகுதி மறுவரையறைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இது முழுக்க முழுக்க பாஜக செய்திருக்கும் சூழ்ச்சி. இது தொகுதி வரையறை மசோதா தான். ஏற்கனவே மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுவிட்டது.
இப்போதைய நாடாளுமன்ற எண்ணிக்கையிலேயே மகளிர் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தலாம். பாஜக தொகுதி மறுவரையை என்னும் மிகுந்த சிக்கல் நிறைந்த பிரச்சனையை, 50 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை, பாண்டோரா பாக்ஸை ஓபன் செய்வது போல், பெரிய குழப்பத்தை உருவாக்க நினைக்கிறார்கள். ஒரு மனிதனுக்கு ஒரு வாக்கு என்று அரசியல் சாசனம் சொல்கிறது.
இன்னொரு பக்கம் மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களில் ஏற்பட்டுள்ள அசமத்துவ நிலை. இந்த இரண்டுக்கும் இடையில் மிகப்பெரிய முரண் உள்ளது. இதனை சந்திப்பதில் சவால் இருக்கிறது. இந்தியாவில் இது மிகமிக முக்கிய பிரச்சனை. இதனை அனைத்து கட்சி கூட்டம் நடத்தி, முதல்வர்களுடன் ஆலோசனை செய்து ஒரு முடிவை எட்டி, நாடாளுமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
அப்படி சென்றால் தான் நிறைவேற்ற முடியும். ஆனால் பாஜக இப்படி எந்த நடைமுறையையும் பின்பற்றவில்லை. வெறும் 50 மணி நேரத்திற்கு முன் ஒரு மசோதாவை கொடுத்து அதனை நிறைவேற்ற முயற்சித்திருக்கிறார்கள். தென் மாநிலங்களின் மீது பாஜகவுக்கு இருக்கும் வஞ்சகமாகவே பார்க்கிறேன் என்று கூறினார். தொடர்ந்து, கடந்த சட்டசபைத் தேர்தலை விடவும் இம்முறை ஒப்பிட்டால் 21 லட்சம் வாக்குகள் உயர்ந்துள்ளது.
கடந்த தேர்தலில் 40 லட்சம் வாக்குகள் உயர்ந்துள்ளது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இயல்பாகவே 3, 4 அணிகள் களத்தில் இருக்கும் போது, ஆளும் கட்சி அணிக்கு சாதகமாக அமையும். விஜய்யால் யாருக்கு அதிகம் பாதிப்பு என்பதை மே 4ஆம் தேதிக்கு பின் ஆய்வு செய்வோம். நம்மால் ஜாதகம் சொல்ல முடியாது. ஆனால் திமுக வலுவான அணி என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications