மதுரை குலுங்க குலுங்க.. ஜெ., பாணி அரசியலை கையிலெடுத்த விஜய்! தவெக 2வது மாநில மாநாடு இந்த தேதியிலா?
மதுரை: எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென மதுரையில் தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடுக்கான பூமி பூஜை இன்று அதிகாலை நடைபெற்றது. இந்த நிலையில் மாநாடு நடைபெறும் தேதியை அறிவித்திருக்கிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஆன விஜய். அதன்படி வருகின்ற ஆகஸ்ட் 25 ஆம் தேதி மதுரையில் தாவேக் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக வெற்றிக் கழகத்தினர் உற்சாகமடைந்துள்ளனர்.
கடந்தாண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், அக்டோபர் மாதம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்திக் காட்டினார்.
அதனைத் தொடர்ந்து விஜய் களத்திற்கு வருவதில்லை என விமர்சனம் எழுந்த நிலையில் பரந்தூர் விமான நிலைய போராட்ட குழுவினரை சந்தித்தது, சிவகங்கை அஜித்குமார் மரணத்திற்காக அவரது வீட்டுக்கே சென்று ஆறுதல் தெரிவித்தது, சென்னையில் பிரம்மாண்டமாக ஆர்ப்பாட்டம் நடத்தியது என விஜய் கள அரசியலுக்கு திரும்பி இருப்பதால் அவர் மீதான விமர்சனங்கள் சற்றே குறைந்திருக்கிறது.

இந்த நிலையில் திடீரென மதுரையில் அடுத்த மாதம் மாநாட்டு பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த முறை விஜய் மாநாடு நடத்திய போது கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் திருச்சி, சேலம், மதுரை என பல இடங்களில் இடம் பார்க்கப்பட்டு இறுதியாக விழுப்புரத்தில் மாநாடு நடத்தப்பட்டது. மாநாடு தொடர்பான பேச்சுகளும் ஏப்ரல் மாதத்தில் இருந்தே எழத் தொடங்கின. கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் மாநாடு தொடர்பாக பல்வேறு யூகங்கள் எழுந்தது. இன்று நடைபெறும், நாளை நடைபெறும், அந்த இடத்தில் நடைபெறும் இந்த இடத்தில் நடைபெறும் என பல யூகங்கள் ரெக்கை கட்டி பறந்தன.
இந்த நிலையில் சைலன்டாக சம்பவம் செய்திருக்கிறார் விஜய். நேற்று மதுரை வந்த புஸ்ஸி ஆனந்த் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இரண்டாவது மாநில மாநாட்டுக்கான பூமி பூஜையை நடத்தி இருக்கிறார். கடந்த செயற்குழு கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறும் எனக் கூறப்பட்ட நிலையில் எங்கு நடைபெறும் எப்போது நடைபெறும் என எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில் சைலன்டாக அனுமதி பெற்று இருக்கும் தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டுக்கான வேலைகளை துவங்கி விட்டது.
இன்று பூமி பூஜை நடைபெற்றிருக்கும் நிலையில் சுமார் 15 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் மாநாடு நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த முறை போலவே பிரம்மாண்டமான மாநாட்டு பந்தல், நடைமேடை, மருத்துவ உதவிகள், உணவு வழங்கும் இடங்கள் என பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.இந்த நிலையில் மாநாடு நடைபெறும் தேதியை அறிவித்திருக்கிறார் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் வணக்கம். தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்கிறேன். வாகை சூடும் வரலாறு திரும்பட்டும். வெற்றி நிச்சயம்." என பதிவிட்டுள்ளார்.
எம்ஜிஆர், விஜயகாந்த் பாணியில் கட்சியின் முதல் மாநில மாநாட்டை மதுரையில் தான் விஜய் நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக மதுரையில் அப்போது மாநாட்டை நடத்த முடியவில்லை. இந்த நிலையில் தேர்தலுக்கு முன்பு திருப்புமுனையை ஏற்படுத்தும் விதமாக மதுரையில் இரண்டாவது மாநாடு நடைபெற இருக்கிறது என்கின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர்.
தமிழக அரசியலைப் பொறுத்தவரை மதுரைக்கு எப்போதுமே முக்கியத்துவம் உண்டு. 2011ல் ஆட்சி மாற்றம் ஏற்பட மதுரையில் ஜெயலலிதா நடத்திய மாநாடு திருப்புமுனையாக அமைந்தது. தற்போது கூட பாஜக, அதிமுக, திமுக என பிரதான கட்சிகள் மதுரையை மையமாகக் கொண்டு பொதுக்குழு, செயற்குழு மற்றும் பல்வேறு மாநாடுகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தென் மாவட்டங்களில் தனது செல்வாக்கை நிரூபிக்க விஜயும் மதுரையை தேர்ந்தெடுத்து இருக்கிறார் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications