Thiruparankundram Deepam Court Case: திருப்பரங்குன்றம் மலை மதநல்லிணக்க மலை!அதை சிதைத்துவிடக் கூடாது! வக்ஃபு வாதம்
மதுரை: திருப்பரங்குன்றம் மலை மதநல்லிணக்க மலையாக உள்ளது, அதை சிதைத்து விட வேண்டாம் என வக்ஃபு வாரியம் தனது வாதத்தில் முன் வைத்துள்ளது. மேலும் இந்த மலையில் அரசியலும் தேவையில்லை என அந்த தரப்பு வாதிட்டுள்ளது.
இதுகுறித்து வக்ஃபு வாரியம் தனது வாதத்தில், "திருப்பரங்குன்றம் மலை மதநல்லிணக்க மலையாக உள்ளது. அதை சிதைத்து விடக் கூடாது. திருப்பரங்குன்றம் மலையில் அரசியல் தேவையில்லை. அரசியலை அனுமதிக்கக் கூடாது. மலைக்கு உரிமை தொல்லியல் துறையிடம் உள்ளது. அவர்களிடம் கருத்து பெறப்பட்டிருக்க வேண்டும்.

தீபத்தூண் என கூறப்படும் தூண், தர்கா இடத்தில் உள்ளது. இந்த பிரச்சினை முழுவதும் உரிமையியல் நீதிமன்றத்தால் தீர்வு காணப்பட வேண்டும். மலை உச்சியில் இருப்பதால்தான் அது சிக்கந்தர் மலை என அழைக்கப்படுகிறது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் தான் என்றும் அங்கு தீபம் ஏற்ற வேண்டும் என்றும் இதற்கு முன் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. சமீபகாலமாகத்தான் தீபத்தூண் என்ற வார்த்தை உபயோகிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த வாதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மதுரை ஹைகோர்ட்டில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்றும் நடந்தது. அப்போது கோயில் நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தனது வாதத்தில், "100 வருடங்களாக உச்சிப்பிள்ளையார் கோவிலில் தான் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இது சரியான இடம் என்று அர்ச்சகர் உறுதி செய்துள்ளார். அறங்காவலர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. பிறகு ஏன் இது போன்ற தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற இது போன்ற உத்தரவை பிறப்பிக்க வேண்டும்? கோயில் அதிகாரத்தில் நீதிமன்றம் எப்படி உத்தரவு பிறப்பிக்கும்.
கோயிலில் பாரம்பரியமான பழக்கவழக்கங்களில் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் ஹைகோர்ட்டில் நேரடியாக மனு தாக்கல் செய்து நிவாரணம் பெற முடியாது. உரிமையியல் நீதிமன்றத்தில் தீர்வு பெறலாம். பூஜை புனஸ்காரத்தில் எப்படி கோயில் நிர்வாகத்தில் நீதிமன்றம் தலையிட முடியாதோ அது போல் தீபம் ஏற்றும் விவகாரத்தில் கோயிலை கட்டாயப்படுத்த முடியாது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் அல்ல. சமணர் காலத்து தூண். சமண முனிவர்கள், இரவில் ஒன்று சேர்ந்து கலந்தாலோசிப்பதற்காக தூண் வைக்கப்பட்டு வெளிச்சத்திற்காக அங்கு விளக்கேற்றியிருந்தனர். இது கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான தூண் அல்ல என வாதிட்டார். கோயில் நிர்வாகம், அறநிலையத் துறை, தர்கா நிர்வாகம் வாதங்களை முன் வைத்திருந்தன.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்றும் விசாரணைக்கு வந்தது. அப்போது வக்பு வாரியம் தரப்பு தங்களது வாதங்களை முன் வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications