நாங்க மதுரக்காரங்க.. எங்களுக்கு சுயமரியாதையும், மத நல்லிணக்கமும் முக்கியம்.. தெறிக்க விட்ட பிடிஆர்!
மதுரை: மன்னர்களை விட மோசமான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது, முதலாளி என்று கை, கால்களை பிடித்தால்தான் நிதி கிடைக்கும் என்ற நிலை உள்ளது என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் மதுரை லோக்சபா தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் சி.பி.ஐ.எம் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அந்தவகையில் மதுரை நகர்ப்பகுதியில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “பொதுவாக தேர்தலின்போது மக்களைச் சந்திக்கும்போது எங்களுக்கு எவ்வளவு செயல் திறன் இருக்கிறது, எவ்வளவு நல்லவர்கள், வல்லவர்கள் எனக் கூறி வாக்கு சேகரிப்பது முறை.
ஆனால் இந்த தேர்தலைப் பொறுத்தவரை அதைவிட முக்கியமான அம்சம் ஒன்று உள்ளது. இந்த தேர்தல் அதிமுக vs திமுக என்ற போட்டி இருந்தால், விளைவின் அடிப்படையில், தகவலின் அடிப்படையில், கணக்கின் அடிப்படையில் எங்கள் ஆட்சி, அதிமுக ஆட்சியை விட எந்தளவு சிறந்தது என்று கூறுவேன்.
ஆனால், இன்றைக்கு ஒரு பாசிச சக்தி நாட்டையே அடிமைப்படுத்தி, ஜனநாயகத்தை படுகொலை செய்து பிணமாக வைத்திருக்கிறது. தேர்தல் பத்திர ஊழல் என்ற உலகின் மிகப்பெரிய நிர்வாக ஊழலைச் செய்த ஆட்சி, மக்களை வஞ்சிக்கும் ஆட்சி, இனி ஒரு நாள் நீடித்தாலும் இந்தியா என்ற நாடோ, ஜனநாயகம் என்ற அடையாளமோ நீடிக்காது.
ஜூன் 4க்கு பிறகு ஒரு நாள் பாஜக ஆட்சி நீடித்தாலும்.. அனல் பறக்கவிட்ட பிடிஆர்! குலுங்கிய மதுரை!
மன்னர்களை விட மோசமான ஆட்சி இன்று நம் நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. முதலாளி என்று கை, கால்களை பிடித்தால்தான் நிதி கிடைக்கும் என்ற நிலை உள்ளது. பாஜக ஆட்சியில் சம உரிமைகள் எல்லாம் காற்றில் பறந்துவிட்டது.
நாங்கள் தமிழர்கள், நாங்கள் மதுரைக்காரர்கள். எங்களுக்கு சுயமரியாதை, சமூக நீதி, மத நல்லிணக்கம் ஆகியவை தான் முக்கியம். பாசிஸ்டுகளும், திறமையற்றவர்களும், மனிதநேயம் அற்றவர்களும், தமிழ் மொழிக்கு எதிரிகளும் என்றைக்கும் எங்களை ஆட்சி செய்ய முடியாது என்பதை தெளிவாக அறிவிக்கும் வகையில் வாக்களிப்போம்” என உரையாற்றினார்.












Click it and Unblock the Notifications