மதுரையில் விஏஓ டூ வருவாய் கோட்டாட்சியர்... பட்டா ஆய்வுக்கு வந்தவர்களிடம் வாயை விட்ட பாஜக நிர்வாகி
மதுரை: மதுரை ஆனையூரில் நீண்ட நாட்களாக வசித்து வரும் மக்களுக்கு இலவச வீட்டு மனை வழங்குவது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது சில வீடுகள் பூட்டியிருந்த காரணத்தால் வருவாய் கோட்டாட்சியர் பட்டா விண்ணப்பத்தை குறிப்பிட்ட வீட்டின் உரிமையாளர்களுக்கு ரத்து செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக நிர்வாகி, நான் யார் தெரியுமா என்று மிரட்டினாராம். அவர் மீது 3 பிரிவின் கீழ் வழக்குகள் பாய்ந்துள்ளது.
ஆனையூர் பகுதி, மதுரை கிழக்கு சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்டது ஆகும். ஆனையூரில் பட்டா இல்லாமல் ஏராளமான மக்கள் நீண்ட நாட்களாக வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்கள்.

இந்த நிலையில் இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி நேரில் சென்று, கள ஆய்வு நடத்தியிருக்கிறார். தமிழ் புத்தாண்டு நாளான நேற்றும் மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆனையூர் பகுதியில் வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி கள ஆய்வுப் பணிகளை மேற்கொண்டிருந்தார்.
அப்போது அங்குள்ள சில வீடுகள் பூட்டியிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வருவாய் கோட்டாட்சியர் பட்டா விண்ணப்பத்தை குறிப்பிட்ட வீட்டின் உரிமையாளர்களுக்கு ரத்து செய்ததாக சொல்லப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மதுரை பாஜக பிரமுகர் ஹரிச்சந்திரன் மற்றும் அவருடன் வந்த 2 பேர் வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி மற்றும் அரசு அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அங்குள்ள அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும் என்று கூறி பாஜக நிர்வாகி வாக்குவாதம் செய்தாராம்.
வழக்கு பாய்ந்தது
மேலும் அந்த பகுதிகளில் கள ஆய்வுப் பணி மேற்கொள்ளக் கூடாது என்று அதிகாரிகளை மிரட்டும் தொணியில் பேசியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஆனையூர் கிராம நிர்வாக அலுவலர் கோதை நாச்சியார் கூடல் புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் பாஜக பிரமுகர் ஹரிச்சந்திரன் மற்றும் ஞானமணி, ரூபேஷ் ஆகிய 3 பேர் மீது பிஎன்எஸ் 296 (பி), 126 (2), 132 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் கூடல் புதூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே வருவாய் கோட்டாட்சியரை பாஜக பிரமுகர் மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அரசு உத்தரவு
இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழக மக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் ஸ்டாலினின் அரசாணையின்படி வீடற்ற ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது தொடர்பான பூர்வாங்க பணிகள் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது.
மதுரையில் பணி
அதேபோன்று மதுரை மாவட்டத்திலும் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணியில் தமிழகம் முழுவதும் உள்ள வருவாய் துறை அலுவலர்கள் இரவு பகல் பாராது விடுமுறை நாட்களிலும் தமிழக மக்கள் பயன்பெறும் வகையில் தங்களது பணியினை செய்து வருகின்றனர்.
இலவச வீட்டு மனை பட்டா
இந்நிலையில் மதுரை மாவட்டம் மதுரை வடக்கு வட்டம், ஆனையூர் கிராமத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வருவாய்த்துறை அலுவலர்களான மதுரை வருவாய் கோட்டாட்சியர், மதுரை வடக்கு வட்டாட்சியர் குலமங்கலம் வருவாய் ஆய்வாளர் ஆனையூர் கிராம நிர்வாக அலுவலர் கிராம உதவியாளர் மற்றும் வருவாய் அலுவலர்களால் கள ஆய்வு பணி செய்தபோது பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் ஹரிச்சந்திரன், ஞானமணி, ரூபேஷ் ஆகியோர் அரசு அலுவலரான மதுரை வருவாய் கோட்டாட்சியரை பெண் என்றும் பாராமல் ஒருமையில் மிரட்டும் தொனியில் பேசி உள்ளனர்.
வருவாய் துறை அலுவலர் சங்கம் கண்டனம்
விடுமுறை தினம் என்றும் பாராமல் அரசின் நலத்திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்கின்ற உயரிய நோக்கத்தோடு பணியில் இருந்த வருவாய்த்துறை அலுவலர்களை பணி செய்ய விடாமல் ஒருமையில் பேசி வாக்குவாதம் செய்து தடுத்துள்ளனர். மேற்படி நபர்களின் அடாவடி போக்கை தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுரை காவல் ஆணையர் ஆகியோரை கேட்டுக்கொள்கிறோம். இதுபோன்ற சூழல்களில் பணியாற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை உருவாக்க வேண்டும் என்று முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறோம்." என்று தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications