முந்தைய முதலீட்டாளர் மாநாடு என்ன ஆச்சு.. எவ்வளவு வேலை கிடைத்தது.. வெள்ளை அறிக்கை கேட்கும் எடப்பாடி
மதுரை: 2 ஆண்டுகளில் ரூ.30,000 கோடி கொள்ளையடித்தது தான் திமுகவின் சாதனை. ஏற்கனவே நடத்திய உலக முதலீட்டாளர் மாநாட்டில் எவ்வளவு முதலீடு பெறப்பட்டது? எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது? என தமிழக அரசிற்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே எஸ்டிபிஐ கட்சியின் மதசார்பின்மை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் எஸ்டிபிஐ கட்சியின் அகில இந்திய தலைவர் பைசி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

இன்று நடக்கும் உலக மூதலீட்டாளர் மாநாட்டில் 3000 பேர் கலந்துகொள்வார்கள் என்று சொல்கிறார்கள். 3,000 பேர் தமிழகம் வந்து தொழில் செய்ய போகிறார்களா?... ஏற்கனவே ஒரு உலக முதலீட்டாளர் மாநாடை நடத்தி புரிதல் ஒப்பந்தம் போட்டீர்கள்.. அதில் எத்தனை ஆயிரம் கோடி தமிழகத்தில் முதலீடு செய்யப்பட்டது. இதனால் எத்தனை ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றனர் என்று உங்களால் வெள்ளை அறிக்கை விட முடியுமா? மக்களை ஏமாற்றுவது அவர்களுக்கு கை வந்த கலை.
உதயநிதி ஆட்சிக்கு வர வேண்டும்: திமுக ஒரு பச்சோந்தி.. திமுகவிற்கு வேண்டியது ஒரு அதிகாரம் தான். கருணாநிதி ஆட்சி செய்து வந்தார். அதன் பிறகு ஸ்டாலின் ஆட்சி செய்கிறார். இப்போது அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆட்சிக்கு வர வேண்டும் என்று துடிக்கிறார்.. மக்களை பற்றி கவலையே கிடையாது. நாட்டு மக்கள் எக்கேடு கெட்டு போனால் அவர்களுக்கு என்ன கவலை. இதை எதற்காக சொல்கிறேன் என்றால் நாம் அனைவரும் தமிழகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
ஒரு அரசாங்கம் சிறப்பாக இருந்தால் தான் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும். இன்றைய ஆட்சியாளர்கள் செய்கின்ற தவறால்.. அடிக்கும் கொள்ளையால் இன்றைக்கு தமிழ்நாடு சீரழிந்துகொண்டு இருப்பதை நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இன்றைக்கு நிதி அமைச்சராக இருக்கும் ஒருவர் சொல்கிறார்.. பொருளாதார நிபுணர் சொல்கிறார்.. உதயநிதியும், சபரீசனும் ரூ.30,000 கோடியை கையில் வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறி கொண்டு இருப்பதாக சொல்கிறார்.
ரூ.30,000 கோடி கொள்ளை: அப்படியென்றால் 2 ஆண்டு ஆட்சி காலத்திலே ரூ.30,000 கோடி கொள்ளையடித்தது தான் திமுகவின் சாதனையாக மக்கள் பார்க்கின்றார்கள். இந்த பணத்தை எல்லாம் சிறுபாண்மை மக்களின் வளர்ச்சிக்காக பயன்படுத்தியிருந்தால் இவர்கள் உங்களை மனதார பாராட்டியிருப்பார்கள். இத்தனை பணத்தையும் கொள்ளையடித்து என்ன செய்ய போறாங்க என்று தெரியவில்லை.
கொள்ளை அடிப்பது ஒன்றே குறிக்கோளாக கொண்ட கட்சி திமுக. மத்தியில் ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் யார் கூட வேண்டுமானாலும் கூட்டணி வைப்பார்கள். ஆனால் அதிமுக கூட்டணி வைத்தால் மட்டும் ஆகா.. கூட்டணி வைத்துவிட்டார்கள் என்று சொல்வார்கள். கூட்டணிக்காக அதிமுக எப்போதும் கொள்கையை விட்டுக்கொடுக்காது. சூழ்நிலைக்காக அன்று கூட்டணி வைத்தோம்.
பாஜகவுடன் கூட்டணி இல்லை: அதே நேரத்தில் கொள்கை என்று வரும் போது அதிமுக கொள்கைக்குதான் முன்னுரிமை கொடுக்கும். அதிமுக தலைமை தெளிவாக பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டது. அதற்கு பிறகும் ஸ்டாலின் சொல்கிறார்.. ரகசியமாக கூட்டணி வைச்சிறுக்காங்க.. கள்ளத்தொடர்போடு கூட்டணி வைச்சிருக்காங்க.. என்னென்ன வார்த்தைகள் எல்லாம் போட்டு பேசுகிறார்கள்..
ஆக அவருக்கு பொறுக்க முடியவில்லை.இதுவரை தந்திரமாக சிறுபாண்மை மக்களின் ஓட்டுக்களை பெற்று வந்த ஸ்டாலினுக்கு இதனால் காய்ச்சல் வந்துவிட்டது. சுரம் வந்துவிட்டது. பிழற்றிகொண்டு இருக்கிறார் இன்றைக்கு.. சிறுபாண்மை மக்களின் வாக்குகளுக்காக துடித்துக்கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications