ரூ.2,500 மகளிர் உரிமைத்தொகை எவ்வளவு? அமைச்சர் நிர்மல் குமார் சொன்ன குட்நியூஸ்.. விரைவில் அமல்?
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்து இருந்தார். இந்நிலையில் தான் ரூ.2,500 மகளிர் உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும்? என்பது பற்றி அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் துணை பொதுச்செயலாளரும், அமைச்சருமான நிர்மல் குமார் இன்று மதுரையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ''விஜய் கூறிய ரூ.2,500 மகளிர் உரிமைத்தொகையை பெண்கள் பெரிய அளவில் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். தற்போது ரூ.1,000 வழங்கப்பட்டுள்ளது. ரூ.2,500 எப்போது வழங்கப்படும்?'' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு அமைச்சர் நிர்மல் குமார், ''நிதி சார்ந்த பட்ஜெட்டில் தான் நிதிகள் அதிகம் ஒதுக்கீடு செய்ய முடியும். இந்த பட்ஜெட்டுக்கு பிறகு தான் நிதி வழங்க முடியும். அந்த பட்ஜெட் வருவதற்கு முன்பாக முதல்வர் நிதி ஆதாரங்களை ஆராய்ந்து சரிசெய்வார். இதையெல்லாம் ஒரு அரசாணையில் நிறைவேற்றிவிட முடியாது. நிதி ஆதாரங்களை எல்லாம் சரிசெய்த பிறகு தான் கொண்டு வர முடியும்'' என்றார்.
அதன்படி பார்த்தால் தமிழக சட்டசபை தேர்தலையொட்டி கடந்த பிப்ரவரி மாதம் திமுக அரசு சார்பில் 2026-2027 ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் முழுமையான பட்ஜெட் மீண்டும் தாக்கல் செய்யப்படும். அந்த வகையில் அடுத்த மாதம் தமிழக சட்டசபையில் நிதி அமைச்சர் செங்கோட்டையன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. இந்த பட்ஜெட்டின்போது அல்லது பட்ஜெட்டுக்கு பிறகு மாதாந்திர மகளிர் உரிமைத்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்குவது பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்று அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து பத்திரிகையாளர் ஒருவர், ''இத்தனை நாட்கள் முதல்வர் விஜய் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. இனியாவது செய்தியாளர்களை சந்திப்பாரா?'' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு நிர்மல் குமார், ''தேவையானபோது தான் எதையும் செய்ய வேண்டும். தினமும் பத்திரிகை செய்தி வழங்கப்பட்டு வருகிறது. என்னென்ன வேலை நடக்கிறது? என்ற விவரம் வழங்கப்படுகிறது. தேவையானபோது செய்தியாளரை சந்திப்பார். அதேபோல், செய்தியாளரை சந்திக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் கிடையாது. அதற்கு 'பெஞ்ச் மார்க்' எதுவும் இல்லை. ஒவ்வொரு நாளும் நடக்கும் பணிகள் தொடர்பாக பிரஸ் ரிலீஸ் வருகிறது'' என்றார்.












Click it and Unblock the Notifications