"லந்து" செய்யும் மதுரை திமுக.. ஏட்டய்யா நட்டா சொன்னாரே.. அந்த எய்ம்ஸ்சை காணோம்.. போலீசில் புகார்!
மதுரை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை காணவில்லை என்று திமுகவினர் புகார் அளித்துள்ளனர். அதை கண்டுபிடிக்க வேண்டும் என்று ஆண்டிபட்டி காவல்நிலையத்தில் திமுகவினர் புகார் அளித்துள்ளனர்.
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா இரண்டு நாள் பயணமாக சமீபத்தில் தமிழ்நாடு வந்தார். மதுரைக்கு சென்ற நட்டா அங்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் ஆலோசனை செய்தார்.
இந்த நிலையில் அதன்பின் காரைக்குடியில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஜெ.பி நட்டா தமிழ்நாட்டில் திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். திமுக அரசு வாரிசு அரசியல் நடத்துவதாக கடுமையான விமர்சனங்களை நட்டா வைத்தார்.
மதுரை எய்ம்ஸ் செங்கல் கூட இல்லை.. 95% பணி முடிந்ததா? ஜேபி நட்டாவின் பச்சை பொய்- எம்.பிக்கள் காட்டம்
எய்ம்ஸ்
முக்கியமாக நீட் தேர்வு குறித்தும், எய்ம்ஸ் மருத்துவமனை குறித்தும் பேசினார். அவர் தனது பேச்சில் சொன்ன சில விஷயங்கள் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. நட்டா தனது பேச்சில், தமிழ்நாட்டில் நீட் தேர்வை திமுக எதிர்ப்பதாக கேள்விப்பட்டேன். நீட் தேர்வு எல்லோருக்கும் வாய்ப்பு அளிக்க கூடிய தேர்வு. இதை அவர்கள் எதிர்க்க காரணம், திமுகவில் உள்ள தலைவர்கள் யாரும் படிக்கவில்லை. அதனால் அவர்களுக்கு கல்வியை பற்றி தெரியவில்லை. அதனால்தான் அவர்கள் நீ தேர்வை எதிர்க்கிறார்கள்.
மருத்துவமனை
நாங்கள் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி இருக்கிறோம். பல இடங்களில் தேடி கடைசியில் மதுரையில் மருத்துவமனையை கட்டி உள்ளோம். இதன் 95 சதவிகித பணிகள் முடிந்துவிட்டன. அதனால் விரைவில் இந்த மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்று தெரிவித்தார். அவரின் இந்த பேச்சு பெரிய சர்ச்சையானது. இதையடுத்து சிபிஎம் எம்பி சு. வெங்கடேசன் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் இடத்தில் நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன்பின் பேட்டி அளித்த அவர்,. பாஜக ஆட்சி புல்புல் பறவைகள் மூலம் 95 சதவிகித வேலையை கட்டி முடித்த மதுரை எய்ம்ஸ் கட்டிதத்தை தேடி நானும் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூரும் போனோம்.
காணவில்லை
கீழ்வானம் வரை மதுரை கிழவி வெற்றிபோட்டு துப்பிய எச்சிலால் சிவந்து கிடந்தது நிலம்.உயர்த்தப்பட்ட திட்ட மதிப்பீட்டிற்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெறும் பணி இன்னும் முடியவில்லை. ஒப்பந்த புள்ளி கோரப்படவில்லை. அப்படியிருக்க பணி முடிந்து பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார் என்று பாஜக தலைவர் கூறுவது அபத்தத்தின் உச்சம், என்று கூறினார். மாணிக்கம் தாக்கூரும் எய்ம்ஸ் கட்டப்பட்டுள்ளதா நேற்று சோதனை செய்து கடுமையாக விமர்சனம் செய்தார்.ஆனால் சில பாஜவினர் நட்டா அப்படி பேசவே இல்லை. ஆரம்பகட்ட பணிகள் மட்டும்தான் முடிந்து உள்ளதாக அவர் தெரிவித்தாக சமாளித்தனர்.
பெருமை
ஆனால் அதற்கும் "நான் பெருமையோடு சொல்லிக்கொள்வேன்... 95% பணிகள் முடிந்துவிட்டன, மதுரை எய்ம்ஸ் வெகுவிரைவில் பிரதமரால் அர்ப்பணிக்கப்படும்" என்று நட்டா கூறிய முழு வீடியோவை வெளியிட்டு சு. வெங்கடேசன் பதிலடி கொடுத்தார். இந்த நிலையில்தான் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை காணவில்லை என்று திமுகவினர் புகார் அளித்துள்ளனர். ஜெ.பி நட்டா எய்ம்ஸ் கட்டுமானம் 95 சதவிகிதம் முடிந்துவிட்டதாக கூறி உள்ளார். ஆனால் அங்கே கட்டிடமே இல்லை. இதனால் உடனே அதை கண்டுபிடிக்க வேண்டும் என்று ஆண்டிபட்டி காவல்நிலையத்தில் திமுகவினர் புகார் அளித்துள்ளனர்.