போராளி, எழுத்தாளர்.. ‘தக் லைஃப்’ எம்.பி.. மதுரையில் மீண்டும் வெற்றிக் கொடி நாட்டிய சு.வெங்கடேசன்!
மதுரை: மதுரை லோக்சபா தொகுதியில் 2வது முறையாக போட்டியிட்ட சு.வெங்கடேசன் 2.09 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். எழுத்தாளர், செயற்பாட்டாளர் என பல முகங்கள் கொண்ட சு.வெங்கடேசன் மீண்டும் மதுரையின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியுள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. மதுரை லோக்சபா தொகுதிக்கு மீண்டும் சு.வெங்கடேசன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். திமுக கூட்டணி வேட்பாளர் சு.வெங்கடேசன், அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன், பாஜக வேட்பாளர் ராம.சீனிவாசன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா தேவி ஆகியோருக்கு இடையேதான் போட்டி நிலவியது.

அபார வெற்றி: கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. காலை முதலே முன்னிலை வகித்து வந்த சு.வெங்கடேசன் அபார வெற்றி பெற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் 4,30,323 வாக்குகளும், பாஜகவின் ராம.சீனிவாசன் 2,20,914 வாக்குகளும், அதிமுகவின் சரவணன் 2,04,804 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் சத்யா தேவி 92,879 வாக்குகளும் பெற்றனர். 2.09 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்றார் சு.வெங்கடேசன். கடந்த முறையை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார் சு.வெங்கடேசன்.
சு.வெங்கடேசன் பற்றி: எழுத்தாளரான சு.வெங்கடேசன், நீண்டகாலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருந்து வருகிறார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஹார்விபட்டி தான் சு.வெங்கடேசனுக்கு சொந்த ஊர். மதுரை திருமலை நாயக்கர் கல்லூரியில் வணிகவியலில் இளங்கலை பட்டம் முடித்தவர் சு.வெங்கடேசன். கல்லூரி காலத்தில் இருந்தே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக பணியாற்றி வந்துள்ளார்.
உத்தப்புரம் தீண்டாமைச் சுவரை இடிக்கும் போராட்டத்தில் தீவிர பங்கு கொண்டார் சு.வெங்கடேசன். மதுரை சுற்று வட்டாரப் பகுதிகளில் கலை, இலக்கிய, பண்பாட்டுச் செயல்பாடுகள் மூலம் கவனம் பெற்றவர் சு.வெங்கடேசன். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பல்வேறு களப் போராட்டங்களில் சு.வெங்கடேசன் கலந்து கொண்டுள்ளார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மேடைகளில் கவிஞராக அறிமுகமான சு.வெங்கடேசன், தமுஎகசவின் மாநிலத் தலைவராக உயர்ந்தார்.
வேள்பாரி எழுத்தாளர் சு.வெங்கடேசன்: 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழில் எழுதி வரும் சு.வெங்கடேசன் தனது முதல் நாவலான 'காவல் கோட்டம்' நாவலுக்காக, 2011ல் சாகித்ய அகாடமி விருது பெற்றார். சு.வெங்கடேசன் எழுதிய 'வேள்பாரி' வரலாற்று நாவல் மிகப்பெரிய வாசகப் பரப்பைச் சென்றடைந்தது. சங்கர் இயக்கத்தில் உருவாகும் பிரமாண்ட படம் ஒன்றில் தமிழுக்கான திரைக்கதை உருவாக்கத்திலும் பணியாற்றியுள்ளார் சு.வெங்கடேசன்.
மதுரை எம்.பி: மதுரையில் கடந்த 2019 மக்களவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சு.வெங்கடேசன் போட்டியிட்டார். சுமார் 4.47 லட்சம் வாக்குகள் பெற்று, 1.39 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். கடந்த 5 ஆண்டுகளாக மக்களுக்காக தொடர்ச்சியாக குரல் எழுப்பி வந்தார் சு.வெங்கடேசன்.
மதுரையில் எய்ம்ஸ் அமைக்க தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருகிறார். நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதியாக குரல் எழுப்புவது ஒருபுறம் இருக்க, மக்களின் அன்றாடப் பிரச்சனைகளுக்காக சமூக வலைதளங்களிலும் தொடர்ச்சியாக ஆக்டிவ்வாக இயங்கி வருபவர். மதுரை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அத்தனை பகுதிகளுக்கும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றித் தந்துள்ளதோடு, தொகுதி மக்களுக்காக ஆளும் அரசுகளிடம் ஏராளமான கோரிக்கைகளையும் வைத்துள்ளார்.
தக் லைஃப் தருணம்: எம்.பியை காணவில்லை என மதுரை உட்பட தமிழ்நாடு முழுக்க எதிர்க்கட்சிகள் போஸ்டர் ஒட்டிய நிலையில், "நான் இங்கேயேதான் இருக்கிறேன்" என போஸ்டருக்கு பக்கத்திலேயே நின்று போட்டோ எடுத்து வெளியிட்டு 'தக் லைஃப்' மொமெண்ட் கொடுத்தார் சு.வெங்கடேசன். சுமார் 28 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் பணியாற்றி வரும் சு.வெங்கடேசன், மீண்டும் மதுரை தொகுதியில் போட்டியிட்டு தற்போது 2.09 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications