மதுரையை ஆள கடும் போட்டி; மகள் Vs மருமகள்; மேயர் சீட் கோதாவில் செல்லூர் ராஜூ Vs ராஜன் செல்லப்பா!
மதுரை: அதிமுக சார்பில் மதுரை மாநகராட்சி மேயர் வேட்பாளராக தங்கள் குடும்ப உறவுகளை களமிறக்க செல்லூர் ராஜூவும், ராஜன் செல்லப்பாவும் இப்போதே காய்நகர்த்த தொடங்கிவிட்டனர்.
மதுரை மாநகராட்சி மேயர் பதவி பெண்கள் கோட்டாவில் வருவதால், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது இளைய மகளை அந்தப் பதவிக்கு கொண்டு வரும் திட்டத்தோடு செயல்பட்டு வருகிறார்.
இதேபோல் திருப்பரங்குன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வான ராஜன் செல்லப்பா தனது மருமகளை மதுரை மேயர் வேட்பாளராக அதிமுக சார்பில் களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

மதுரை
உலகப்பிரசிதி பெற்ற மீனாட்சியம்மன் கோயில் அமைந்துள்ள மதுரை மாநகருக்கு ஆண்டொன்றுக்கு லட்சக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலாபயணிகள் வந்து செல்கிறார்கள். கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தான் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வரவு குறைந்துள்ளதே தவிர, அதற்கு முன்னர் வரை மதுரை வீதிகளில் வெளிநாட்டு பயணிகளை திரும்பிய பக்கமெல்லாம் பார்க்கலாம். மதுரை மண்ணின் கலாச்சாரமும், உணவும், பாரம்பரியமும் வெளிநாட்டினரின் கேமராக்களில் கிளிக் செய்யப்படுவதை நம்மில் பலரும் பார்த்திருக்ககூடும்.

பெண்கள்
இப்படி உலகளாவிய அளவில் தொடர்புடைய மதுரைக்கு மேயராக வேண்டும் என்ற ஆசை யாருக்குத் தான் இருக்காது. மாநில தேர்தல் ஆணையத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கை மூலம் இந்த முறை மதுரை மேயர் பதவி பெண்கள் கோட்டாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் திமுக, அதிமுக, என இரண்டு கட்சிகளின் முக்கியப் பிரமுகர்களும் தங்கள் குடும்ப பெண்களை மேயராக்க வேண்டும் என காய் நகர்த்த தொடங்கிவிட்டனர்.

யாருக்கு வாய்ப்பு
அந்தவகையில் அதிமுகவில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜூ தனது இளைய மகளை மதுரை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட வைத்து மேயராக்க வேண்டும் என விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த தனது விருப்பத்தை ஓ.பி.எஸ்.சிடம் கூட அவர் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ.வான ராஜன் செல்லப்பாவும் தனது மருமகளை ஏன் மேயராக்க கூடாது என நினைப்பதாக கூறுகிறார்கள் உள் விவரமறிந்தவர்கள்.

கடும் முயற்சி
இதனால் அவரும் தனது பங்குக்கு தனது மருமகளுக்கு மேயர் சீட் வாங்க அதிமுக தலைமையிடம் காய்நகர்த்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் தான் சசிகலா குறித்து ஓ.பி.எஸ். அளித்த பேட்டி தொடர்பாக கூட ராஜன் செல்லப்பா கருத்துக் கூற முன்வரவில்லை எனக் கூறுகிறார்கள் உள்ளூர் கட்சிக்காரர்கள். மேலும், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியில் நிர்வாகியாக இருக்கும் ராஜன் செல்லப்பா மகன் ராஜ் சத்யன் மீது எடப்பாடி பழனிசாமி நன்மதிப்பு வைத்துள்ளதால் காற்று இவர்கள் பக்கம் வீசினாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை எனக் கூறப்படுகிறது.

நிர்வாகிகள்
இவர்கள் இருவரை தவிர மேலும் சில அதிமுக முக்கியப் பிரமுகர்கள் இந்தப் போட்டியில் இருப்பதாகவும் அவர்கள் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மூலம் மேயர் சீட்டை பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் இருப்பதாகவும் கூறுகிறார்கள் தூங்காநகரத்து ர.ர.க்கள்.












Click it and Unblock the Notifications